சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2026 03:04
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் விழா இன்று கோலாகலமாக நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சீட்டணஞ்சேரி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான சிவகாம சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் 16 நாட்கள் உத்சவம் நடப்பது வழக்கம். விழாவின் போது கடந்த ஆண்டுகளில் தேரோட்டம் நடந்து வந்தது. இடையில் தேர் பழுது மற்றும் நிர்வாக சீர்கேடு போன்றவையால் பல ஆண்டுகளாக தேரோட்டம் இல்லாமல் சித்திரை விழா மட்டும் நடந்து வந்தது. இதனிடையே, இக்கோவிலில் 36 அடி உயரம் கொண்ட புது மரத்தேர் செய்யப்பட்டு கடந்த 2022ல் தேரோட்டம் நடந்தது. அதை தொர்டந்து கோவில் புனரமைப்பு பணி காரணமாக கடந்த ஆண்டில் சித்திரை விழா நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த பிப்., 22ல் மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடந்தது. காலை 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவகாம சுந்தரியுடன் காலீஸ்வரர் எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் தேரின் வடம் பிடித்து அப்பகுதி முக்கிய தெருக்கள் வழியாக இழுத்தனர். இதில், சீட்டணஞ்சேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.