சாரங்கா...கோவிந்தா... என கோஷம் முழங்க சாரங்கபாணி கோவில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2026 10:04
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.பூலோக வைகுண்டம் என போற்றப்படும் இக்கோவிலில் சொர்க்க வாசல் தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா, சித்திரை பெருவிழா ஆகியவை வெகு விமரிசை யாக நடைபெறுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டும் சித்திரை பெருவிழா கடந்த ஏப்.22 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை- மாலை நேரங்களில் பெருமாள், தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. கடந்த ஏப்.25ம் தேதி ஓலை சப்பரத்தில் சாரங்கபாணி மற்றும் தாயார் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அதிகாலை 5:15மணிக்கு பெருமாள் சீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு 8:45 மணிக்கு மேல் தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் தேரில் எழுந்தருளிய பெருமாளை வணங்கினர். தேர் நிலைக்கு வந்ததை தொடர்ந்து இன்று இரவு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் இந்த ஆண்டு சித்திரை தேர்விழாவை முன்னிட்டு தேர வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கோவில் 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக மதிக்கப்படுகிறது. திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையான, 28 அடி உயரம் மற்றும் 40 அடி அகலத்துடன் மொத்த எடை 500 டன் இருக்கும் இந்த தேரின் அலங்காரம், விழா போது 110 அடி உயரம் கொண்ட தேர் என சிறப்பு பெற்றவை.