ராவணனின் தம்பியான விபீஷணன் அரக்கவம்சத்தில் பிறந்தாலும், மாற்றான் மனைவியான சீதையை, தன் அண்ணன் விரும்புவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அண்ணனிடம் இதுபற்றி எவ்வளவோ எடுத்துச் சொன்னான். ராவணனோ தம்பியின் பேச்சை ஏற்கவில்லை. இதனால், அண்ணனுக்கு அழிவு உறுதி என்ற நிலையில், ராமனிடம் சரணடைந்தான். அப்போது அனுமன் விபீஷணனிடம், இந்த அரக்கர்களிடம் நீங்கள் எப்படி இவ்வளவு காலம் இருந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு விபீஷணன், 32 பற்களுக்கு இடையில் மென்மையான நாக்கு இருப்பதைப் போலத் தான்! என்றார். சொல்லின் செல்வனான அனுமன் கூட, அவனது உவமையைக் கேட்டு வியந்தார். இச்செய்தி துளசிதாசர் ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது.