திருப்புல்லாணி கிராமக்கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2026 04:07
திருப்புல்லாணி ; திருப்புல்லாணி அருகே பத்திராதரவை கிராமத்தில் உள்ள ராதே கிருஷ்ணா கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
புதியதாக கோயில் திருப்பணி கட்டுமான பணிகளுக்கு பின்னர், கடந்த ஜூன் 29 அன்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. பகவத் பிரார்த்தனை, அக்னி பிரதிஷ்டை, சுப்ரபாதம், மகா சாந்தி, சாற்று முறை உள்ளிட்ட நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:45 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் அரியக்குடி ஸ்ரீதர் பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் ராதே கிருஷ்ணாவிற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பத்திராதரவை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* வண்ணாங்குண்டு அருகே செல்வனூரில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 1 முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை முனீஸ்வரர், கருப்பண்ணசாமி கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை செல்வனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* உத்தரகோசமங்கை அருகே மாலங்குடி கிராமத்தில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. பூர்ணாஹூதி, எந்திரப் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல், சுப்ரபாதம் உள்ளிட்டவர்கள் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பட்டு பாமா ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணன் கோபுர விமான கலசத்தில் பட்டாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவர்களுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாலங்குடி யாதவர் சங்கம் மற்றும் யாதவ இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.