திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. பக்தர்கள் புஷ்பாஞ்சலிக்கு (கேந்தி பூ தவிர) அழகும்,மணமும் மிக்க மலர்களை கொடுக்கலாம்.இதுகுறித்து திருக்கோவில் இணை ஆணையர் சுதர்சன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் நாளை அதிகாலை 4.00 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 5.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும்,தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. காலை 9.00 மணிக்கு வருஷாபிஷேகம் நடக்கிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது.புஷ்பாஞ்சலிக்கு பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். இந்த பூக்கள் மூலவருக்கு நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பயன் படுத்தப்படும். இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் அம்பாளுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கிறார் என அந்தச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.வருஷாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.