பரமக்குடி சுந்தரராஜ பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2026 05:07
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் வைபவம் கோலாகலமாக நடந்தது.
பரமக்குடி சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நடக்கிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் மாப்பிள்ளை திருக்கோலத்தில் யானை வாகனத்தில் அமர்ந்தார். பின்னர் ரத வீதிகளில் உலா வந்து 8:30 மணிக்கு கோயிலை அடைந்தார். அங்கு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் வைபவம் பக்தர்கள் மத்தியில் கோவிந்தா கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. அப்போது திருமண வரன் தேடுவோர் மற்றும் குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா தீபாராதனைகள் நிறைவடைந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று இரவு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூ பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வந்து அருள்பாலிப்பார். நாளை காலை நவநீதகிருஷ்ணன் சேவையும், இரவு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் அருள்பாலிக்க உள்ளார்.