சென்னை: சென்னை, திருவொற்றியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பட்டினத்தார் திருக்கோவிலில், ஆடி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற குருபூஜை விழா இன்று மிகுந்த பக்தி பரவசத்துடன் மற்றும் கோலாகலமாக நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தர்கள் திரளாக கோவிலுக்கு வருகை தந்து பட்டினத்தாரை தரிசித்து வழிபட்டனர். காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. இதனை முன்னிட்டு, திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் திருக்கோவிலில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் திருமுறைகளை பல்லக்கில் வைத்து மேளதாளம் முழங்க தேவார திருமுறை பாராயணத்துடன் ஊர்வலமாக புறப்பட்டனர். சன்னதி தெருவில் தொடங்கிய இந்த ஆன்மிக ஊர்வலம் நான்கு மாடவீதிகள் மற்றும் முக்கிய சாலைகள் வழியாக சென்று, கடற்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பட்டினத்தார் கோவிலை வந்தடைந்தது. பின்னர், மூலவர் பட்டினத்தாருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கரும்பு, மலர்கள் மற்றும் பல்வேறு அலங்காரங்களால் பட்டினத்தார் எழிலுற அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.