மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை, குமரன் குன்றில் மிகவும் பழமை வாய்ந்த கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்த வருகிறார். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 27ம் தேதி நடந்தது. இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கும்பாபிஷேக விழாவை அடுத்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக, கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். யாக வேள்வி பூஜைகள் நடந்தன. பின்பு வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யம் அணிவித்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், தாலி சரடும் வழங்கப்பட்டது. சிறுமுகை மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர். இந்த வைபவத்தில் திருப்பணிக்குழு தலைவர் பழனிசாமி, அறங்காவலர் குழு தலைவர் செல்வகுமார், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், பழனிசாமி, சரோஜினி, ராமச்சந்திரன், செயல் அலுவலர் சபரீஸ்வரி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெள்ளேபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சிவக்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.