பதிவு செய்த நாள்
07
பிப்
2013
10:02
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே வயது முதிர்வுடன், கடந்த கார்த்திகை மாதம் இறந்த கருடனின் உடலை, மூன்று மாதம் பானையில் வைத்து பாதுகாத்து வந்து, பவானி நதிக்கரையில் நேற்று ஐதீகப்படி தகனம் செய்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது அரியப்பம்பாளையம். இங்குள்ள மேற்கு தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 60. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், இதே பகுதியை சேர்ந்த பழனிக்கவுண்டர், 58, கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்கிறார். கடந்த கார்த்திகை மாதம், 10 தேதி கரும்பு காட்டுக்கு, பழனிக்கவுண்டர் தண்ணீர் பாய்ச்சிய போது, வயதான நிலையில் ஒரு கருடன் இறந்து கிடந்தது. இதுபற்றி, தன் சகோதரர் செல்லிகவுண்டர், 61, மற்றும் நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகம், ஊர்க்கவுண்டர் பழனிச்சாமி, 45, ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். அப்பகுதி பெருமாள் பக்தர் சின்னச்சாமி தாசனிடம் கூறியபோது, "இறந்த கருடன் உடலை, புதுப்பானை வாங்கி, அதில் வைத்து, மூன்று மாதம் பாதுகாக்க வேண்டும். அதன்பின் முறைப்படி பவானி நதிக்கரையில் தகனம் செய்ய வேண்டும் என்றார். இதன்படி தோட்டத்தின் உரிமையாளர் ஆறுமுகம், தன் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில், புதுப்பானையில் இறந்த கருடன் உடலை, மூன்று மாதமாக பாதுகாத்தார். நேற்று இந்த கருடனின் உடலை தகனம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. நேற்று அலங்காரம் செய்யப்பட்ட கருடனில் உடலை, ஊர்வலமாக பவானி நதிக்கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு விறகுகள் அடுக்கி அதன்மேல் கருடனில் உடலை வைத்து, சின்னச்சாமி தாசன் தீ மூட்டினார். அதற்கு முன் ஐதீகப்படி சடங்குகள் அனைத்தும் நடந்தது. கருடனில் உடலை தகனம் செய்த பின், பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, சாம்பலில் ஊற்றி கருடனில் எலும்புகளை எடுத்து ஆற்றில் விட்டனர். பின், சின்னச்சாமி தாசன் மொட்டை அடித்து, இறந்த கருடனுக்கு அஞ்சலி செலுத்தினார். பவானி ஆற்றங்கரையில் பெருமாள் சிலை வைத்து, அதற்கு மாலை அணிவித்து, படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர்.""இறந்த கருடனை ஐதீகப்படி தகனம் செய்தால், மழை வரும் என்பது ஐதீகம், என, சின்னச்சாமி தாசன் கூறினார்.