Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலகேசி பகுதி-2
முதல் பக்கம் » நீலகேசி
நீலகேசி பகுதி-1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2013
05:03

நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்று. சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப் பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்து

1. நல்லார் வணங்கப் படுவான்பிறப் பாதி நான்கு
மில்லா னுயிர்கட் கிடர்தீர்த்துய ரின்ப மாக்குஞ்
சொல்லான் றருமச் சுடரானெனுந் தொன்மை யினா
னெல்லா முணர்ந்தா னவனேயிறை யாக வேத்தி.

2. அன்னான் பயந்த வறவாரமிர் துண்டு நின்றார்
இன்னா ரினைய ரெனவேண்டுவ தில்லை யார்க்கும்
பன்னாந் துணையும் பணிந்தாகிய பத்தி யினா
னென்னா லுரைக்கப் படுகின்றதொன் றீங்கு ளதே.

3. பண்டாக மத்துட் பயிலாவுரை யென்று மிக்கார்
விண்டீங் கிதனை வெகுளார்விடல் வேண்டு வன்யான்
தண்டா மரைமே னடந்தான்றடந் தாள்வ ணங்கிக்
கண்டேன் கிடந்தேன் கனவின்னிது கண்ட வாறே.

4. ஆய்நீல வுண்க ணவளாயடங் காமை செய்யும்
பேய்நீல கேசி பெரியோனறங் கொண்ட பின்னைத்
தீநீல வுள்ளந் திரிந்தேறு திருவத் தளாய்
மாஞால மெல்லா மறமாற்றிய மாட்சி யளா.

5. தேவன் னுரைப்பத் தெளிந்தேன்பிற் றெளிந்த வெல்லாம்
மாவென் றுகொண்டேன் மடனேவலி யாக நின்று
நாவல் புலவ ரவைநாப்பண்ணி நாட்ட லுற்றேன்
பாவின் னவென்று பழிப்பாரினி யில்லை யன்றே.

6. கண்டிங்கு நாளுங் கடல்வையகங் காதல் செய்யும்
வெண்டிங்க டானும் விமலந்தனக் கில்ல தன்றே
கொண்டென்சொ லெல்லாங் குணனேயெனக்கூறு கென்னே
னுண்டிங்கோர் குற்ற மெனில்யானுமொட் டாமை யுண்டோ.

7. தெள்ளி நரைத்துத் தெருளாதுறு தீமை செய்யும்
புள்ளி னுரையும் பொருளாமெனக் கோட லினா
லெள்ளுந் திறத்த.: துரையென்றிது நீக்க லின்றாய்க்
கொள்ளும் முலகங் குணமாணறம் வேண்டு மென்றால்.

கடவுள் வாழ்த்து

8. நாடும் மநாடா ளரசுந்நக ருந்நகர்சூழ்
காடுங் கடவுள் புகனீக்குதல் கார ணம்மாத்
தேடுஞ் சிறுபேய் பெரும்பேய்த்தியைச் சென்று பற்றும்
பாடும் மவடான் பகைகொண்டுபல் கால்வெ ருட்டி.

9. தான்கண்ட வன்செய் தவந்தன்னைக் கலக்க கில்லா
மான்கொண்ட நோக்கின் னவளாய்மற மாற்றி யபின்
னூன்கொண்ட காட்சி முதலாக வுடைத்த தெல்லாம்
யான்கண்ட வாறே யுரைப்பன்னவை யார்க் கிதனை.

தர்ம உரை

10. மாஞ்சோலை பொங்கி மருதங்கிளிப் பிள்ளை கள்வாய்த்
தீஞ்சா றொழுகுந் திணையின்னணி தங்கி யேங்குந்
தாஞ்சால வாழ்நா டளிரீனுந் தகைய துண்டு
பாஞ்சால மென்று பலரும்புகழ் பார்த்தி நாடே.

11. வாடா வளத்தான் மலர்ஞால மதிப்பின் மிக்க
நாடாவ திதா மதனன்னலஞ் சொன்ன லத்தாற்
கூடா தெனினுஞ் சிலகூறலும் வேண்டு மன்றே
பாடா விருந்தார் பரிவஞ்சும் படிய தன்றே.

12. வருபுனலன வளவயலிடை மறிவனவின வாளை
மருவினியன மகிழ்தகையன மலர்சிறையன நாரை
கருவரியன கடுநடையன கனைகுரலன கம்புள்
திருவுருவின தெரிகதிரின திசைதிசைதொறு செந்நெல்.

13. பணைநிலையன கமுகொடுபடு பழமுதிர்வன தெங்க
மிணைநிலையன சுளைகனியிவை யினியனபல வாழை
மணனயர்வன மனையயலன மதுவிரிமணி நீலந்
திணிநிலையன திரளரையன தெரிமலரன மருதம்.

14. கரைதழுவிய கழிமடலின கடிகமழ்வன கைதை
புரைதழுவிய பொதியவிழ்வன பொன்மலர்வன புன்னை
விரைதழுவிய விழைதகையன வெறிமலர்விரி ஞாழல்
நிரைதழுவிய நெறிகழியிடை நிகரலரன நெய்தல்.

15. குருவுடையன கொடிமிடைவொடு குலைவிரிவன கோடல்
தருசுடரன தளவயலின தகைமலரன தோன்றி
யருகுடையன வணியுருவின வயலனவலர் காயா
முருகுடையன முகைவிரிவன முறியலர்வன முல்லை.

16. நனைசினையன நகுவிரையன நலனுடையன நாகம்
வினையுடையன பொழுதிவையென விரிவனகணி வேங்கை
கனைசுடர்விடு கதிர்மணியறை களனயர்வன காந்த
ளினியனபல சுனையயலன விறுவிரையன குறிஞ்சி.

17. ஆடலொடு பாடலவை தாமறுத லின்றிக்
கேடில்புக ழாரவைகள் கண்டுமிசை கேட்டு
மூடலொடு கூடலுணர் வார்கள்புணர் வாராய்ச்
சேடரொடு சேடியருஞ் செல்வமிக நல்கி.

18. தானமொடு சீலமவை தாங்கிநல மோங்கி
மானமொடு மாயமில ராயமனை யாருங்
கானமொடு கல்லடரு ளில்லிடரு நீங்கி
ஞானமொடு செய்வினைக ணையமுயல் வாரும்.

19. அந்தணரு மல்லவரு மாகியுட னாய
மந்தமறு நால்வருண மாட்சியின ராகித்
தந்தநெறி யிற்றிரித றானுமில ராகி
நந்திமிசை சேறலுடை நன்மையத நாடே.

20. ஞாலமறி நன்மையுடை நாடதென லானு
மாலுமழை மூன்றுமுடை மாதமென லானுங்
காலமவை தாங்கடுமை காண்பருமை யாலும்
பாலைநில மொன்றுமவ ணின்மை பழுதன்றே.

21. இன்ன தன்மையி னாடினி தாளுமம்
மன்ன வன்னவன் யாரெனில் வானிடைச்
சொன்ன நீர்மைச் சுரேந்திரன் போன்றிவட்
டன்ன னாரில் சமுத்திர சாரனே.

22. ஆற்ற லாலரி மாவவ னாணையாற்
கூற்ற மேயெனக் கூறலு மாங்குடி
போற்ற றாயனை யான்பொருந் தார்கண்மேற்
சீற்றத் தாற்றெறு தீத்திர ளேயனான்.

23. தீய தீரத் திருவிளை யாடிய
தேயங் காவல னாய்த்திசை யாவினு
மீய நீண்டகை யேந்த னகர்திசை
போய புண்ட வருத்தன மென்பதே.

24. வளங்கெழு நெடுமதில் வாயில் யாவையு
முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்துமேல்
விளங்கிவெண் மதிசெலல் விலக்கி நீள்விசும்
பளந்ததன் றுணைமையு மறிவ தொத்தவே.

25. விரைசெல லிவுளியும் வேழ வீட்டமு
நிரைசெலற் கொடுஞ்சிநன் னேமி யூர்தியு
மரசுடைப் பெருங்கடை நெருங்கு மார்கலி
திரைபொரு கடலொலி யன்ன செம்மற்றே.

26. அகிற்புகை யளாவியு மணிகொள் வீதியிற்
றுகிற்கொடித் தொகுதியுந் தூய சுண்ணமு
முகிற்றலைக் கலலிவான் மூடி மாநகர்
பகற்கிடை கொடாததோர் பான்மை மிக்கதே.

27. ஆங்க மாநக ரணைந்தது பலாலைய மென்னும்
பங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்கா
டேங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி
யாங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே.

28. விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி
யிண்டு மீங்கையு மிருள்பட மிடைந்தவற் றிடையே
குண்டு கண்ணின பேய்களுங் கூகையுங் குழறிக்
கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும்.

29. ஈமத் தூமமு மெரியினு மிருளொடு விளக்கா
வூமைக் கூகையு மோரியு முறழுறழ் கதிக்கும்
யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பில வழைக்கும்
தீமைக் கேயிட னாயதோர் செம்மலை யுடைத்தே.

30. வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த
கொள்ளி மலையுங் கொடிபடு கூறையு மகலும்
பள்ளி மாறிய பாடையு மெலும்புமே பரந்து
கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே.

31. காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித்
தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச்
சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி
யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும்.

32. கோளி யாலமுங் கோழரை மரங்களும் குழுமித்
தூளி யார்த்தெழு சுடலையு முடலமுந் துவன்றி
மீளி யாக்கைய தாக்கியுண் பேய்க்கண மிகைசூழ்
கூளி தாய்க்கென வாக்கிய கோட்டமொன் றுளதே.

33. இறைவி கோட்டத்து ளீரிரு திங்கள தகவை
யுறையு ளாகவவ் வுறையருங் காட்டகத் துறைவான்
பொறையு மாற்றலும் பூமியு மேருவு மனையான் தான்.
சிறைசெய் சிந்தைய னந்தமில் பொருள்களைத் தெரிந்

34. அத்தி காயங்க ளளவைக ளாலளந் தறிவான்
குத்தி யாதிய குணங்களிற் பெரியவ னரிய
பத்தின் மேலிரு தவத்தினிற் பவத்தொட ரறுக்கும்
முத்தின் யான்முனிச் சந்திர னெனும்பெயர் முனிவன்.

35. அன்றக் கோட்டத்து ளறிவிலா மறிதலை யறுப்பான்
சென்ற தெய்வதைக் கெனச்சிலர் சிறப்பயர் பொழுதின்
நின்றக் கோண்மின மெனச் சொல்லி நெறியறி வுறுவோ
னொன்றற் பல்வகை யுயிர்க் கொலை யுரைமின மெனவே.

36. பண்டிந்நின்ற பணைத்தோளி பாலற்பெ றாமையைக்
கண்டியாமிக் கணமோடி தன்பாற்சொன் னோமாக
வுண்டதாயிற் றோர்குழவி யென்னவுவப் பித்தற்குக்
கொண்டுவந்தே மறியறுக்க வென்றார் கொலையாளர்.

37. ஊனுடம் போவுயிரோ வுறுகுழவி யாத
றேனொடுங்குங் குழலாட்குத் தேவர்மன னுந்தந்த
தூனுடம் பென்னி லுதிரமா முயிரென்னின்
மானிடமாம் வினைமேலைச் செய்தன்றோ வந்ததென்றான்.

38. ஏறியானை யிருங்கலைக ணேர்ந்தா ரவையிவையென்
றூறங்கி யுருவுருசெய் தாலுமுவந் தொழிபவான்
மாறுகோ ளிலைமண்ணான் மறியுருசெய் தீந்தக்காற்
பாறினீர்க் கும்மவர்க்கும் பழிபாவ மொன்றிலையே

39. கொன்ற வன்னே கொடியனென வுலகங் கூறு மதனாலு
மொன்ற நூலா ருரைகளோ டொப்ப முடியு மதனாலு
மின்றி னின்று மிதுவொழிதி ராயி னுங்கட் கிருமைக்கு
நன்றி தென்றான் வெந்நரகம் புகுதல் விலக்கு நாவினான்.

40. கோறல் பொய்த்தல் கொடுங்களவு
    நீக்கிப் பிறர்ம னைகண்மேற்
    சேற லின்றிச் செழும்பொருண்மேற்
    சென்ற சிந்தை வேட்கையினை
    யாறு கிற்பி னமருலக
    நுங்கட் கடிய தாஞமன்றான்
    நீறு மோடு நிழன்மணியும்
    பொன்னு நிகரா நோக்குவான்.

41. ஏத்து தற்கேற் றானிரங்கி யின்ன வைசொல் லக்கேட்டுப்
பாத்தி யோயெம் பழவினையும் பாறு கென்று பணிந்துதாம்
யாத்து நின்ற வம்மறியும் மறமு முடனே கொண்டுபோய்க்
காத்து மென்றார் கருவினையு ணீங்கு நல்ல கருத்தினார்.

42. ஆய மெல்லா மதுசொல்லிப் போக வவணே வாழ்கின்ற
பேயுங் கூடிப் பெரிதுமகி சூழ்ந்து தம்பெற் றிசொல்லி
னாயு மாக்க ருத்துமில னாவ னிவனங் கட்கென்னிற்
றீயு மன்னென் றேற்றகரு மையாலெனுஞ்சிந் தையிலவாய்

43. நிரந்து வெங்கதி ரெழுதலி னிற்றலை யிலதாய்க்
கரந்த காரிருள் போற்கணங் காண்டலுக் கரிதாய்ப்
பரந்த நாம்பல நாடுகள் பாடிக ணாடி (றெண்ணி)
யிரந்தோர் வன்றெய்வங் கொணர்ந்திவற் கடிதுமென்

44. ஆசு மிங்கிருந் தினியென்னை எழுகவென் றயல
காசி நாட்டினுஞ் சேடிய நாட்டினுங் காணா
தேசந் தாம்பல திரியவத் தென்றிசை நீல
கேசி மாதெய்வந் தலைப்பட்டுக் கிளர்ந்தின்ன வுரைக்கும்.

45. வலிசெய் தெம்மிடம் புகுந்தடு மடையொடு முடைசேர்
பலியு மூட்டுதல் பாவமீ தெனப்பலர்க் குரைத்துக்
கலிகொள் காடுதன் காற்பொடி யாகவுங் கருதா
னலைசெய் தானெமை யாமுனக் கபயமென் றழுத.

46. அழுவ தென்செய அருந்தவம் வலித்தவ னிருந்து
பொழுது போக்குதல் புரிந்தனன் பொருத்தம துடைத்தே
கழுகு தாமுணக் காட்டுவ னெனக்கைகள் புடையா
வெழுக வென்றுசென் றிடுபிணப் பறந்தலை யிருந்தாள்.

47. இருட்டி ருட்டென நடந்துசென் றெழுந்தெழுந் திருக்கும்
வெருட்ட லன்னினை விழுங்குவ னெனத்தன்னை வியக்கு
மருட்டி றம்மில னறியினி யருவரை நெடுங்கோட்
டுருட்டு வேனென வுயர்தவத் தவன்முன்னை யுரைக்கும்.

48. சீல நல்லன சினவரன் றிருமொழி தெளிந்தான்
கால மூன்றினுங் கடையில்பல் பொருளுணர் வுடையான்
மேலு மின்னபல் வியந்தரம் வெருட்டுத லறிவான்
நீல கேசிதன் னெறியின்மை யிதுவென நினைந்தான்.

49. வெருட்டு மாகிலும் வெருட்டுக விகுர்வணை களினாற்
றெருட்டு வேனிவ டிறமின்மை சிறிதிடைப் படலும்
பொருட்டி றங்களைப் புலமையிற் புனைந்துரை பெறுமே
லருட்டி றந்நல வறநெறி பெறுதலு மறிந்தான்.

50. மாக மேயுற மலையன்ன சிலையொடு சிலையா
மேக மேயென விசும்பிடை வெடிபட விடியா
நாக மேயென நாவினை நீட்டுவ காட்டாப்
பாக மேயெனப் பலவெனச் சிலவென வுலவும்.

51. இலங்கு நீளெயிற் றிடையிடை யழலெழச் சிரியாக்
கலங்கு மார்ப்பொடு சார்ப்படு மழையெனத் தெழியாப்
பிலங்கண் டன்னதன் பெருமுழை வாய்திறந் தழையா
மலங்க நின்றுதன் மடனெடு மயிர்க்கையிட் டுயிர்க்கும்.

52. பொங்கு பூமியுட்பொடிபட வடியிணை புடையாப்
பங்க மேசெய்து படபட வயிறடித் திறுகி
யங்கி போலவீழ்ந் தலறிநின் றுலறியங் காக்கு
மெங்குந் தானென வெரிகொள்ளி வளையெனத் திரியும்.

53. கல்லி னாற்கடுங் கனலினுங் கடுகென வெடிக்கும்
வில்லின் வாய்ப்பெய்து விளங்குவெண் பகழிகள் விடுக்கும்
மல்லி னாற்சென்று மறித்திடு வேனென நெறிக்கும்
பல்லி னாற்பல பிணங்களி னிணங்களைப் பகிரும்.

54. ஓடு முட்குடை யுருவுகொண் டருவென வொளிக்கும்
பாடு பாணியிற் பலபல கலகல வொலியா
ஆடு நாடக மரும்பசி களைகென விரும்பி
ஊடு போவனென் றுரைத்துரைத் துள்ளஞ்செய் தொழியும்.

55. குஞ்ச ரம்பெருங் கொடுவரி கடுவிடை கொலைசூ
ழஞ்சு தன்மைய வடலரி யெனவின்ன பிறவும்
வெஞ்சி னம்பெரி துடையன விவையினும் வெருளான்
றஞ்ச மன்றிவன் றவநிறை சுடுமெனத் தவிர்ந்தாள்.

56. அச்ச மேயுறுத் தழிக்குவன் தவமென அறியேன்
விச்சை வேறிலன் விழுக்குண முடையனிவ் விறலோன்
இச்சையாலன்றி யிவன்முன்னை நிலையெனக் கரிதா
நச்சு மெய்யென நடுங்கும் னுடம்பென வொடுங்கி.

57. ஆற்றல் சான்றவ னருந்தவ வழலெனை யடுமான்
மாற்று மாறென்கொ லெனநனி மனத்தினு ணினையாச்
சீற்றந் தீர்ந்தென்செய் கருவினை தணிகெனப் பணிந்தாள்
கூற்றம் போல்வதோர்கொடுமையையுடையவள் குறைந்தே.

58. சிந்தித் தாளிது செறியெயிற் றரிவைய துருவாய்ப்
பந்தித் தாகிய பழவினை கெடுகெனப் படிற்றால்
வந்தித் தியான்கொண்ட வடிவினின் மனநிறை யழித்தா
னொந்தித் தீநிகர் நோன்புகை விடுமிவ னெனவே.சி

59. யாம நீங்கலு மரசன்ற னொருமக ளுரைசால்
காம லேகைதன் னுருவொடு திருவெனத் தோன்றித்
தாமஞ் சாந்துதண் மலரின்ன பலகொண்டு துணைசால்
சேமங் காவல சேவடி போற்றெனச் சென்றாள்.

60. வணங்கி வந்திடம் வலங்கொண்டு வழிபடு பொழுதில்
கணங்க டாம்பல கடன்சொல்லிக் கலந்தெடுத் தேத்தித்
துணங்கை யாடத்தன் றுகிலிடை மேகலை துளங்க
வணங்கு மெய்யவ ளருந்தவ னுழைவர நினைந்தாள்.

61. காவ லாளகுங் கடையிறந் திவண்வர வொழிக
வேவ லாளரு மிதற்கெய்து மியல்குறை முயல்க
கூலி யான்குறை யுளதெனக் குறுகுமி னமரென்
றோவில் பல்புக ழுறுதவ னறியநின் றுரைக்கும்.

62. ஆண்டைக் கோட்டத்தை அணைந்ததோ ரகலிலை யால
மாண்டைக் காயதோர் மரமுத லிருந்தமா தவனைக்
காண்டக் காயென்செய்கருவினை தணிக்கெனப் பணிந்தாள்
வேண்டிக் கொண்டவவ் வியத்தகுவிளங்குரு வுடையாள்

63. வேண்டிய வுருவத னாலும் வேட்கைசெய் யுருவத னாலுங்
காண்டகு மடவர லுருவங் காமுறு வதுநனி தாங்கி
யீண்டிய மிகுகுணத் திறைவ னியல்பினை யெனையது நினையா
நீண்டதோர் கொடியயற் கொடிபோ னிறைதவ வருளென நின்றாள்.

64. உடம்பொடு முயிரிடை மிடைந்த வொற்றுமை வேற்றுமை விகற்பிற்
றொடர்ந்தபல் வினைகளைத் துணிக்குஞ் சுதநெறி முறைமையு மறிவான்
படர்ந்ததன் யோகினை நிறுவிப்பணிந்தவரட் காசிடை மொழிந்தா
னிடம்பக மகளிவள் பெரிது மிராசபுத் திரியல ளெனவே.

65. என்னைஈண் டைக்கு வரவென் றருந்தவன் வினவலு மெழிலார்
பொன்னனாள் புடைபெயர்த் திட்ட பொலங்கல மனங்கலக் குவபோன்
மின்னொளி யோடுற மிழற்றமிழற்றுவ கிளியென மொழிந்தாள்
முன்னநான் பரவிய வரங்கண்முடிகுறை கொடுப்பதற் கெனவே.

66. யாதுநீ கொண்ட வரமென் றருந்தவ னியல்பினின் வினவ
வேதினாட் டிறையெங்க ளிறைமே லியல்பின்றி யெழலொழி கெனவே
போதுசாந் தவியொடு புகையும் பொருந்திய பொருந்தெய்வக் கெனலு
மோதிஞா னியிது வாயி னுரையழ கீதென மொழிந்தான்.

67. தோடுகொண் டொருசெவி விளங்கத் துளங்குவ மகரமொன் றாடப்
பாடுவண் டோடுசுரும் பரற்றப் பல்கலம் வயிரவில் வீச
வாடுகொம் பனையவ ருரைக்கு மச்சமோ பெரிதுடைத் தடிகள்
காடுகண் டாற்பிறர்க் கறியேன் கவற்றுவ தொக்குமீ தெனக்கே.

68. மணிநகு நெடுமுடி மறவேன் மன்னவன் மகளெனின் மடவாய்
அணிநகை யாயமோ டாடி அரும்பெறற் சுற்றமோ டிருப்பாய்
பிணிமிகு பேய்வன மிதனுட் போதுற லொருதலை பிறவோ
துணிவொடு துறந்தவர்க் கல்லாற் றுன்னதற் கரிதிது பிறர்க்கே.

69. வேணுவோ டினையன பிறவும் வியப்புறு பெருவனம் வினவிற்
பேணுதற் கரிதிது பெரிதும் பிணிதரு பேய்வன மெனவே
வாணுதன் மயிர்குளிர்த் துரைக்கும் மாதவத் தடிகளென் றானுங்
காணுதற் கரியன வுருவங் கண்டறி வனகளு முளவோ.

70. புக்கிருந் தொருமனை யுறைவார் போவதும் வருவதுங் கண்டான்
மக்களுந் தாயரந் தம்முள் மருள்வதும் வெருள்வது முளதோ
மிக்கபல் கதிகளு முயிரின் மெய்ம்மையு முணர்ந்தவர்க் கரிதே
ஒக்குமற் றவையுள வேனு முரைப்பது பொருத்தமின் றெமக்கே.

71. சந்திர முனிவர னுரைப்பத்தளிரியல் சாவுகள் சாரா
மந்திர முளதெனி னடிகள்மனத்தொடு பணிமின மெனவே
யந்தரத்தவர்களும் வணங்குமருந்தவ னவையுனை யடையா
இந்திரன் வேண்டினும் பேய்களென்னமற் றிலங்கிழை மடவோள்;

72. துப்படு துவரிதழ் துடிக்குந்துகிலிடை யகலல்கு றுளக்குஞ்
செப்படு வனமுலை செறிக்குஞ்சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கு
மொப்படு துடியிடை யொசிக்குமுவ்வுறு மதிமுக முழற்று
மிப்படி யவளிவை செயலுமிவையெனை யெமக்கென வுரைத்தான்.

73. காதின கனகப் பைந்தோடுங்கைவெள் வளைகளுங் கழலத்
தாதின வினமலர் பலவுந்தலையன நிலமிசை யுதிரப்
போதன புணரரி நெடுங்கண்புனல்வரப் பூந்துகிற் புடையா
வேதனை பெரிதுடைத் தடிகள்விளிகவிப் பிறப்பென வுரைத்தாள்.

74. பிறவியும் பிறவியுட் பிறக்கும் பிணியுமப் பிணியினைத் துணிக்கு
மறவியின் மருந்துமம் மருந்தின்மாட்சியுங் கேட்குறின் மடவா
யறவிய மனத்தினை யாகி அலங்கழித் தொழிலொழிந் தடங்கி
உறவினை யோம்பினை யிருவென்றுயர்தவ னுரைத்தலு மிருந்தாள்.

75. நாற்கதி யுள்ள நரகரை நாஞ்சொல்லின் மூன்றுவகைக்
காற்று வலையங்க ளேந்து நிரையக் கதிநிலந்தா
மேற்ற நிகோதத்தி னிம்ப ரிருளி னிரளிருண்மே
லாற்றப் புகையள றார்மணற் கூர்ம்பர லாய்மணியே.

76. ஏழா யவைவிரிந் தெண்பத்து நான்குநூ றாயிரமாம்
போழா மவற்றப் புரையின் விகற்பமும் பொற்றொடியாய்
கீழா ரலிகண் முழுச்செவி கிண்ணர்க ளெண்ணிகந்த
வூழாம் பிறப்புமுவ் வாதமல் லாருரு வொப்பினரே.

77. விலங்கின் வகையும் விரிவன யான்சொல்ல வேண்டுதியே
லலங்கலம் பூணா யிருவகை யாமவை யென்கொலென்னின்
நிலங்களி னிற்பவுஞ் செல்பவு மாமென நிற்பனதா
மிலம்பட லின்றியிவ் வையகத் தைந்தா யியன்றனவே.

78. இயங்கு வனவு மிருபொறி யையறி வெல்லையவாய்
மயங்கியிம் மத்திம நல்லுல கத்தின மற்றிவற்று
ணயம்படு நாவின் மூக்கில நந்து முரண்முதலா
வயங்கியங் கோடிய வாயிரண்டாய அறிவினவே.

79. உண்ணி முகுட்டை எறும்பெறி தேண்முத லாவுடைய
வெண்ணில் பல்கோடிய வாயவ் விரண்டொடு மூக்குடைய
கண்ணிய மூவறி வாமவை பெற்றாற் கருணமிலா
நண்ணிய வண்டொடு தேனீ யனையவு நாலறிவே.

80. இறப்பப்பல் காலின வெட்டி னிரண்டிரண் டேயிழிந்த
பறப்ப நடப்ப தவழ்வன வூர்வன பற்பலவாச்
சிறப்புடை யிந்திய மைந்தென வந்த செவியுடைய
மறப்பில் கடலொடு தீவினு மல்கிய பல்விலங்கே.

81. வெப்பமுந் தட்பமு மிக்கு விரவிய யோனியவாய்ச்
செப்புவ செப்பில் செய்கைக ளாற்றம செய்வினையைத்
துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்து முன்றோன்றுவன
வொப்பவு மொப்பிலுடம்புடம் பேகொண் டுழல்வனவும்.

82. நல்லவர் தீயவர் திப்பிய ரொப்பில் குமானுயரோ
டல்லவ ருள்ளுறுத் தாடவ ரைவரு ளாதியினார்
சொல்லுக தன்மையென் பாயெனிற்சொல்லுவன் பல்வகையாற்
புல்லிய போகப் பெருநிலந் தன்னைப் பொருந்தினரே.

83. தீமா னுயர்திறந் தேற்றிடிற் றீவின் சிறுநிலத்தார்
கோமான் முதலார் குணங்களிற் குன்றிய குற்றத்தராய்த்
தாமாம் பெரிய தவந்தலை நிற்பினுந் தன்மைபெறா
ராமான் மடப்பிணை யன்னமென் னோக்கி யவரதிறமே.

84. திப்பிய ரென்னப் படுபவர் தீர்த்தந் திறப்பவரு
மப்பிய புண்ணியத் தாழிய ராழிய ரையவரும்
வெப்பிய வான் செலவ் விஞ்சையரெஞ்சலில் வெள்ளியரும்
பப்பிய ரேயவர் பான்மை வினவினும் பைந்தொடியே.

85. கோலமி னோன்றற் குமானுயர் தம்மையுங் கூறுவன்கேள்
வாலமுங் கோடும் வளைபல்லும் பெற்ற வடிவினராய்ச்
சீலமுங் காட்சியுந் தீண்டலு ரந்தரத் தீவிலுள்ளார்
நீலமும் வேலுங் கயலு நிகர்த்த நெடுங்கண்ணினாய்.

86. மானுய ரென்னப் படுபவர் தாமா விதையமென்னுங்
கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த்
தானுய ரின்பந் தவத்தாற் றலைப்படுந் தன்மையினார்
வானுயர் தோன்றல் வளர்பிறை யேசிய வாணுதலாய்.

87. தூமாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பருப்பால்
வேமானியரென வைவரித் தேவர் விரித்துரைப்பிற்
றீமாண்குமரரோ டீரைவர் முன்னவ ரன்னவர்பின்
பூமாண் புனைகுழ லாய்க்கினிச்சொல்லற் பொல்லா துகொல்லாம்.

88. இன்குர லார்முத லாநும ரீறா விவருமெண்மர்
பொன்பிதிர்ந் தன்ன பொறிசுணங் காகத்துப் பூண்முலையா
யென்றலு மீரிழு தாரழ லுற்றாங் கினைபவளை
நின்றிறம் பின்னறி வாமறங் கேளென நேர்ந்தனளே.

89. அந்தர வாழ்க்கையர் சோதிடர் தாங்களு மைவகையர்
சந்திர சூரியர் கோளவர் நாளவ ரல்லவராய்
மந்தர மாமலை தன்னை வலமுறை சூழ்பவருஞ்
சிந்துபு நின்றுசெல் லாதே விளங்குந் திறலவரும்.

90. ஆரண னச்சுதன் சோதம னந்தமு மாதியுமாய்ப்
பாரணை நல்ல பதினறு கற்பத் தவரவர்மே (வோர்
லோரிண ராயமும் மூன்றொன்ப தைந்துக ளுள்ளுறை
வீரியர் வைமா னிகரெனக் கொண்ணீ விளங்கிழையாய்.

91. இப்ப டிப்பி றவியு
ளொப்பி றீய நாரகர்
துப்ப ரிய மாதுயர்
செப்பு வாஞ் சிறிதினி.

92. ஈரி ருள்ளி னார்கடம்
பேர ளவ்வைஞ் ஞாறுவி
லோரு மோச னையவை
யூரும் வேத னையரே.

93. காள மான மெய்கடாம்
வாள வாய்க ளாற்பல
கீள வாப வாயினும்
மீளு மேனி நீரினே.

94. மல்ல வர்ம றஞ்செய்துங்
கொல்ல வாவ வல்லமெய்
பல்ல வாவு முள்ளன
சொல்ல வாவ வல்லவே.

95. பண்டை வோந் யர்கடாங்
கண்டு கண்க னல்களாய்
மண்டி மாம றஞ்செய்ப
வெண்ட வப்ப லவுமே.

96. பேடி வேத னைபெரி
தோடி யூறு மாதலாற்
சேடி யாடு வன்மையிற்
கூடி யாவ தில்லையே.

97. கொன்ற பாவ மென்றுமூன்
றின்ற பாவ மென்றுதீச்
சென்று வேவ வாயினு
ணின்று கூவ வாக்குவார்.

98. உண்ண வாவ நீரெனக்
கண்ண வாவ வாபவர்
நண்ண லாவ வல்லதே
ரெண்ண லாவ தில்லையே.

99. கரிவ கன்றி நின்றகம்
பொரிவ பொங்கி வீழ்ந்தழைத்
தெரிவ வின்ன மாதுயர்
பரிப வரு மில்லையே.

100. அங்கு வெங்க னலினுட்
டங்கி யுந்த லைத்தலை
பொங்கி யும்பு கைபுக
நுங்கி யுந்நு கர்வவே.

101. ஓச னைய பல்லுயிர்
வீவி னையு றவருங்
காய்சி னக்க டுவிடம்
பேசி னார்க்க ருளுணா.

102. ஓச னைய பல்லுயிர்
வீவி னையு றவருங்
காய்சி னக்க டுவிடம்
பேசி னார்க்க ருளுணா.

103. நலங்களில் பிறவியு ணஞ்சுணா ரகர்கள்பின்
விலங்கின்வே தனைகளும் விரிக்கல்வேண் டும்மெனிற்
கலங்கியொன் றொன்றினைக் கண்டுகாற் றென்னப்போ
மலங்கிநின் றும்மனம் மன்னுமஞ் சுங்களே.

104. தண்ணென்மா மழையினாற் றாமழிந் துழல்பவும்
புண்ணினா லழியமெய்ப் போரிடைப் புகுத்தவு
முண்ணல்கா ரணத்தினா லோட்டியிட் டொறுக்கவு
மெண்ணில்பல் வலையினு மிழக்குமவ் வுயிர்களே

105. வேதவா தியர்கடம் வேள்விவாய விட்டவும்
பூததே வர்கட்கெனாப் புல்லியோர்கள் கொல்லவு
மோதுநோய் மருந்தெனவ் வூட்டுதற் குரைப்பவும்
சாதலால் வரும்மிடர் தாமெனைப் பலவுமே.

106. நடுக்கமுறு நாற்கதியு ணரர்கள்படுந் துன்ப
மெடுக்கிலவை தாமிரண்டு பாகினவு மாகு
மடக்கமிலர்க் காவனவு மன்றிப்பொது வென்றும்
வடுப்பிளவு வாட்பகழி வாட்டியவொண் கண்ணாய்.

107. தீவினைசெய் வாயிலொடு செற்றமனக் குற்ற
மாவினையி னாம்வெகுளி மானமொடு மாய
மோவினையிற் பற்றவல மச்சமொடு மற்று
மாவனவெ லாமடக்க மில்லவர்த நோவே.

108. இழுக்கலுறு தீக்கதியி லுய்க்குமென வெண்ணார்
விழுக்குலங்கள் மாசுபடு மென்பதனை வேண்டார்
புழுக்குலங்க ளானிறைத்த போர்வையென வோரா
ரழுக்குடம்பிற் கேகெடுவ ராடவர்க ளந்தோ.

109. மதுவொன்றுங் கோதை மலரன்ன கண்ணாய்
பொதுவென்ற நோயும் புணர்ந்திரண்டு பாகா
மிதுவொன் றிடையூ றிரண்டாய் விரியு
மதுவன்றி மெய்ப்பிணியு மூன்றா யலரும்.

110. பெடையூடு சாயற் பிணையன்ன நோக்கி
யிடையூ றிரண்டு மினியாவை யென்னி
னடையா வுயிரதுவு மல்லதுவு மன்ன
நடையாய் முதலதுவு நாற்பூத மாமே.

111. பெருமழையு நீரும் பெரிதெறியுங் காற்றுங்
கருமலையுங் கல்லுங் கடுநவையு நஞ்சுஞ்
செருமலையும் பல்படையுஞ் செந்தீயும் வந்திங்
குருமிடியு மெல்லா முயிரல்ல வூறே.

112. செத்துவங்க டாக்கிச் செயிரி னணங்குதலும்
மக்கள் பலவகையின் மன்னு மலைகொலையுங்
துக்கஞ்செய் பல்விலங்கிற் றோன்று மிடையூறு
மொக்கவிவை மூன்று முயிருடைய வூறே.

113. தீர்வனவுந் தீராத் திறத்தனவுஞ் செய்ம்மருந்தி
னூர்வனவும் போலா துவசமத்தி னுய்ப்பனவும்
யார்வினவுங் காலு மவைமூன்று கூற்றவா
நேர்வனவே யாகு நிழறிகழும் பூணாய்.

114. நல்லாய்நா ரின்றியே நாமுன் விரிசெய்த
வெல்லா விமையோர்க்குமென்று மிறுதி சார்ந்த
தல்லா லகன்றுன்ப மாகா நுமரன்றிப்
பொல்லா தவர்களுறு மல்லைப் புகலுறுங்கால்.

115. தீயே யெனவௌர்க்குஞ் செல்லல் பலவாக்கி
வேயே புரைதோளாய் மிக்க விடமெங்கும்
பேயே யெனப்பட்டுப் பேணா தனசெய்வர்
நீயே யெனினல்லை நின்போல்வ ரன்றோ.

116. பேர்தற் கரும்பிணி தாமிவை யப்பிணி
தீர்தற் குரியதிரி யோக மருந்திவை
யோர்தற் றெளிவோ டொழுக்க மிவையுண்டார்
பேர்த்த பிணியுட்பிற வார்பெரி தின்பமுற்றே.

117. மானொத்த நோக்கிமருந் தென்றவைமூன் றினுள்ளும்
ஞானத்தி னன்மைநனி கேட்குவை யாயினக்கா
லூனத்தை யின்றியுயி ராதிய வுள்பொருள்க
டானற் குணர்தலிது வாமதன் றத்துவம்மே.

118. காண்டலு மல்லதே யளவை காண்டன்முன்
பூண்டவைம் பொறிமன மவதி புண்ணிய
மாண்டகு மனப்பரி யாயங் கேவல
நாண்டகு மரிவைய ருருவ நண்ணினாய்.

119. நினைவு மீட்டுணர் வூக நேர்தரு
புனைவுசே ரணுமைபொய் யின்மை மெய்யுரை
முனைவர்தம் மாகம மொழியு மாகுமென்
றனையன காட்சியி லளவை யைந்துமே.

120. வைப்பு நயனள வைபுகு வாயிலென்றும்
பொய்ப்பி லுயிரே பொருவில்குண மார்க்கணை
செப்பி னிவற்றிற் றிரியாதுள் புகுபவாயி
னொப்பில் பெருமை யுணர்விற்குயர் மாட்சியாமே.

121. காட்சி வகைதான் கடவுண் முதலாய
மாட்சி யமைந்தபொரு ளெட்டு மனத்துவைத்து
மீட்சியில தாய்விரிந் துந்திய வின்பவெள்ள
வேட்கையது வாந்தெளி வென்றனர் வென்றவரே.

122. முந்துற்ற மூடப் புலிமூன்றும் பிழைத்த பின்னை
யன்பச்ச மாசை யுலகோடிலிங் காத்த ரொப்பு
மென்பெற்று மேத்த லிலராயெண் மயத்து நீங்க
லின்புற்ற காட்சி யுடையார்க்கியல் பாகு மன்றே.

123. ஐயுற்றல் வேட்கை யுவர்ப்பேமயக் கியாது மின்மை
செய்குற்ற நீக்க றிரிந்தாரை நிறுத்த லின்றிப்
பொய்யற்ற காதற் பொருவில்லறங் காட்ட லெட்டுங்
கையுற்ற வாயில் லதுகாட்சியின் மாட்சி யாமே.

124. நன்றாய காட்சி யுடனாகிய ஞானந் தன்னோ
டொன்றாகி யுள்ளத் தொழியாமை யொழுக்க மென்ப
குன்றாத வொன்றுங் குறைபாட்டதுங் கூறு பவ்வே
வென்றார்த நூலின் விதிமெய்ம்மை யுணர்ந்த வரே.

125. போற்றல் செறிவே பொறையாதிய நல்ல றமு
மேற்ற நினைப்போ டிருசார்வி ழுத்த வமு
மாற்றல் பரிசை முதலாகிய வன்ன வெல்லாம்
மாற்ற மறுக்கு மொழுக்கத்தின் மாட்சி யாமே.

126. யோக மிவற்றை யுடனுண்ட வுயிர்க ளெல்லாம்
மாக விசும்பி னவர்தம்மொடு மன்ன ரும்மாய்ப்
போக நுகர்ந்து பொருந்தாவினை புல்ல லின்றி
யேகநல் லின்ப மியைந்தாலிழ வில்லை நல்லாய்.

127. பிறவியா மாறும் பிணியாந் திறமும்
மறவிதா னில்லா மருந்தாம் வகையும்
திறவியாள் கேட்டுத் தெரிந்துள்ளங் கொள்ள
வறவியான் றானு மறவமிர்த மீந்தான்.

128. வண்டவாம் வார்குழலும் வாளெயிறும் பூண்முலையும்
தொண்டைவாய் நன்னலமுந் தோளுந் துடியிடையும்
கண்டவாங் காமுகரும் யாமுங் கணநரியும்
விண்டவாக் கொண்டுணரின் வேறுவே றாமன்றோ.

129. கரையவா வாங்குங் கயமகன் கைத்தூண்டி
லிரையவாப் பன்மீ னிடருறுவ தேபோல்
நுரையவா நுண்டுகிலு மேகலையுஞ் சூழ்ந்த
வரையவாய்ப் பட்டார்க்கு மாழ்துயரே கண்டீர்.

130. மட்டார் மலர்புனைவும் வாணெடுங்கண் மையணிவும்
பட்டார் கலையுடையும் பல்வளையும் பைந்தோடு
நட்டாரை யெல்லா நரகுக்கே யுய்க்கு நாய்க்
கொட்டார்த்தார் செய்யும் கோலங்கள் வண்ணம்.

131. ஆடினாய் நான மணிந்தாய் கலன்மாலை
சூடினா யேனுஞ் சுணங்கார் வனமுலையா
யூடினா யாக வொழுக் கூற்றைப் பல்பண்டம்
மூடினாய் தோலின் முகமனுரை யேனே.

132. மின்போ னுடங்கிடையும் வேயேய் திரடோளு
மென்றே யிவை மகிழ்ந்தீங் கென்முன்னே வந்தாயாற்
புன்றோலும் பல்லென்பும் போர்த்த புறங்காட்டு
ளன்றே யுறைவ னவற்றான் மருள்வேனோ.

133. மெழுகுருகு மண்பாவை மேதையான் காய்த்தி
யொழுகுருகு செம்பொன்னா லுண்ணிறைந்த தேபோல்
புழுகுருகு மெய்காட்டிப் பொல்லாத போக்கி
யழகுருவு கொண்டா ளறவமிர்த முண்டாள்.

134. காய்வ செயினுங் குழவிக்கட்கவன்று கழிகண் ணோட்டத்தாற்
றாய்தன் முலையி லமுதூட்டுந்தகைய னறவோன் றானென்று
மாய வுருவ மாறித்தன்மற்றை யுருவ மேகொண்டு
பேயேன் செய்த பிழையெல்லாம்பெரும பொறுவென் றிறைஞ்சினான்.

135. முழங்கு முந்நீர் வையத்து முனிதக் கார்தம் முன்னின்று
வழங்க வாட்ட மொழிவர்நமன்னும் பொறாத வகையுண்டோ
வழுங்க லென்ற வறவோன்றனலர்கொள் பாதம் பெரிதேத்தித்
தொழுங்கை யாளக் குணக்குன்றைத்துதிப்ப னென்று தொடங்கினாள்.

136. வெள்ள மாரி தரித்தோய்நீவினையின் வாயி லடைத்தோய்நீ
யுள்ள மாட்சி யுடையோய்நீயுயப்போம் வண்ண முரைத்தோய்நீ
நள்ளென் யாமத் தியான்செய்தநவைக ளெல்லா நனிகண்டு
மெள்ள லில்லாப் பெரியோய்நின்னிணையில் பாத மணைவல்யான்.

137. மூட மூன்று முரைத்தோய் நீமுரண்செய் தோற்ற முனிந்தோய் நீ
வீடுங் கட்டும் விரித்தோய் நீவினையி னின்பம் வெறுத்தோய் நீ
காடு கிளர்ந்து காட்டியான் கலக்க வொன்றுங் கலங்காத
பாடற் கரிய பெரியோய்நின்பழிப்பில் பாதம் பணிவல்யான்.

138. அல்லற் பிறவி யகன்றோய்நீஆசை வெவ்வே ரறுத்தோய்நீ
வெல்லற் கரிய வனங்கனைமெய் வெண்ணீ றாக வெகுண்டோய்நீ
கொல்லக் கருதி வந்தேனைக்குணங்க ளாலே வணங்குவித்த
சொல்லற் கரிய பெரியோய் நின்றோமில் பாதந் தொழுவல்யாள்.

139. உடம்பின் மெய்ம்மை யுணர்ந்தோய்ந பயுறங்க லார்வ மறுத்தோய்நீ
யிடங்கொ ளின்னா வினையெல்லா மெரிக்கும் வாயில் விரித்தோய்நீ
யடங்க லில்லேற் கருளினாலறங்கூர் மாரி பொழிந்தோய்நின்
றடங்கொள் செந்தா மரையடியென்றலைய வேயென் றலையவே.

140. தடம்படு மாரி தலைத்தலை நூற
விடம்படு பல்லுயிர் மெய்வழி யேற
வுடம்பொடு வேறெனு மோர்ப்பினை யாகி
யடங்கிய நின்னடி யஞ்சலி செய்வேன்.

141. கல்லுரு கக்கடுங் காற்றெறி போதினி
னல்லிருள் கூர்சுடு காட்டிட மாகப்
பல்வினை யும்பறிப் போய்நின் பாதம்
நல்வினை யிற்றொழு வேனினி நாளும்.

142. மங்குன் மழைபொழி மாரிபெந் நாளிற்
கங்குலெண் ணில்லங் கவலைசெய் காட்டு
ளெங்கு மியங்கல னென்றிருந் தோய்நின்
பங்கயம் போல்வன பாதம் பணிவேன்.

143. இற்றவர் தம்முட றின்றிட யாமம்
முற்ற நரிமுர லும்முது காட்டுட்
பற்றற வேநினை வோயிரு பாதம்
சுற்றுபு யான்விதி யிற்றொழு வேனே.

144. திண்டிறல் சேர்சிறு பேயறை கீறி
வெண்டலை யால்விளை யாடிய காட்டு
ளெண்டுக ளும்மெரிப் போய்நின பாதம்
வண்டறை பூவொடு வந்தனை செய்வேன்.

145. பிணங்க ளிடையிடை போரழ லீமத்
தணங்கு துணங்கைசெய் தாடிய காட்டுட்
குணங்க ளுடையன குன்றுத லில்லாய்
வணங்குவ னின்னடி வைகலி னாளும்.

146. நுனித்தகு நன்னெறி நோக்கின ளாகி
முனிப்பிறை யோனடி மும்மையி னேத்திப்
பனிக்கட லன்னதொர் பாவமுஞ் செய்தே
னினிச்செய்வ தென்னுரை யாயெனக் கென்றாள்.

147. விலங்கு வெந்நர காதிக டம்முள்
விளிந்து தோன் றிவிழு நோயொடு முற்றுக்
கலங்கி யெங்குங் கண்ணில வாகிக்
கவலைவெள் ளக்கட லிற்குளித் தாழு
நலங்களில் லாவுயிர் தங்களுக் கெல்லா
நடுக்கநீக் கியுயர் நன்னிலை யீயுஞ்
சலங்களில் லாப்பெரி யோன்சரண் கொண்ணீ
சனங்கட் கெல்லா மவன்சர ணென்றான்.

148. உய்தல் வாயுரைத் தாயதன் மேலு
முயிருள்ளிட் டபல வுள்பொருள் சொன்னாய்
நைதலில் லாத்தெளி வோடுநன் ஞான
நானுங் கொண் டேனுன் னற்குண மெல்லாம்
பெய்துதந் தாய் பிழைத் தேற்கினி தாவோர்
பிராயச்சித் தம்பெரி யோயரு ளென்னச்
செய்த தீமை கெடக்கட னாட்டிற்
சினவ ரன்னெறி யேதெருட் டென்றான்.

149. யாஅ தடிக ளதருளா
லருந்துய ரகல்வகை யதனான்
மாஅ துடைஅடி யிவைதா
மறவலெ னெனவலங் கொண்டு
வேஎ தடவியன் மலைமேல்
விரிகதிர் மணிவிளக் காதி
தீஇ தடுதலை விலங்குஞ் சினகர
முவகையிற் சென்றாள்.

 
மேலும் நீலகேசி »

நீலகேசி பகுதி-2 மார்ச் 15,2013

குண்டலகேசி வாதம் 150. கொல்லை முல்லைபைங் கோங்குருந்தங் கோடறண் குரவநல்ல மல்லிகை நறவம்ஞாழல் தாழைபுன் ... மேலும்
 

நீலகேசி பகுதி-3 மார்ச் 15,2013

மொக்கல வாதம் 267. நீவருத லொழியென்றுநிறைபதும புரத்துக்கேமாதிரந்தா னெறியாகமனம்போலச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar