தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை ஈஷா யோகா மையத்தில், கடந்த, மார்ச் 23ம் தேதி முதல், எல்லாத்தையும் ராணுவத்தை சேர்ந்த 21 வீரர்களுக்கும், கடற்படையை சேர்ந்த 78 வீரர்களுக்கும் என, 99 பாதுகாப்பு படை வீரர்களுக்கு, சத்குரு குருகுலம் சார்பில், ஹத யோகா ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த பயிற்சி வகுப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த பயிற்சி பெற்ற வீரர்கள், அவர்களின் படை தலங்களில் உள்ள மற்ற வீரர்களுக்கும், இந்த பயிற்சிகளை கொண்டு செல்வார்கள். இதுவரை, ஈஷாவில், 700க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்களுக்கு, ஹத யோகா ஆசிரியர் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி குறித்து இந்திய கடற்படை கேப்டன் ஸ்ரீகாந்த் ஜோஷி கூறுகையில்,"இந்த யோகா பயிற்சி, உடல் உறுதி, மன அமைதி மற்றும் நம் உடல் நிலை குறித்த ஆய்வு ஆகிய மூன்று முக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒருவர் தனக்குள் சலனமற்ற நிலையை வளர்த்துக் கொள்ளும்போது, சுற்றி இருக்கும் சூழல்கள் குறித்த விழிப்புணர்வு அவருக்குள் மேம்படுகிறது. இது அதிக அழுத்தமான நேரங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும், சவாலான சூழல்களில் திறம்பட செயல்படவும் உதவுகிறது. இந்த ஆசிரியர் பயிற்சி, தங்கள் பிரிவுகளில் உள்ள ஏராளமான வீரர்களுக்கு யோக பயிற்சிகளை கொண்டு செல்ல வழி வகுத்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதுகாப்பு படை சமூகத்திலும் பரவலான தாக்கத்தை உருவாக்குவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி உள்ளது,"என்றார்.