பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
புதுச்சேரி: காளத்தீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று பஞ்ச ரத உற்சவம் நடந்தது.மிஷன் வீதியில் உள்ள, செட்டிக் கோவில் எனப்படும் காளத்தீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவிலில் 10ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 17ம் தேதி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி அதிகார நந்தியில் கோபுர தரிசனம் நடந்தது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில், சிறப்பு பூஜை செய்து, சுவாமி வீதியுலா நடந்தது. 24ம் தேதி பிச்சாண்டவர் வீதி உற்சவம், சந்திரசேகர் நாக வாகனத்தில் வீதியுலா, 25ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், பஞ்ச குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.நேற்று காலை, பஞ்ச ரத உற்சவம் நடந்தது. முக்கிய வீதிகளில் சுவாமி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நாளை (28ம் தேதி) விடையாற்றி உற்சவம், 29ம் தேதி ஊஞ்சல் உற்சவம்,31ம் தேதி 108 சங்காபிஷேகம் நடக்கிறது.