ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்றைக் கேளுங்கள். சொற்களுக்கெல்லாம் முதலானது அ. சொல்லில் முதல் சொல் ஆதிபகவான் என்னும் கடவுள். ஓம் என்ற மந்திரம் அ மற்றும் ம இணைந்தது. ம என்பது உலக உயிர்களைக் குறிக்கும். அதாவது, அ என்னும் எழுத்தால் கூறப்பட்ட பகவானுக்கு, ம என்று கூறப்பட்ட உயிர்கள் அடிமை. இந்த உயிர்கள் செய்யும் தவறுகளைத் திருத்தி, அவர்களோடு சேர்ந்து மகிழ்கிறான் இறைவன். இதனால் தான் எல்லா மந்திரங்களிலும்,ஓம் சேர்த்து சொல்கிறோம். ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள் என்று ஒவ்வொரு தடவையும் சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்று எல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்றெல்லாம் சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.