பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
11:04
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால்குட அபிஷேகம் நடந்தது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, 1,008 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனம் நடந்து வருகிறது. அதே போல், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு தங்க கிரீடம், தங்க வேல், பச்சைமாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. கோவில் நடை, நேற்று முன்தினம் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டது. நேற்று காலை, 8:00 மணிக்கு, கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து, 1,008 பால்குட ஊர்வலத்தை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், கோவில் இணை ஆணையர் புகழேந்தி, நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன் துவக்கி வைத்தனர். பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து, பெரிய தெரு, கீழ்பஜார் தெரு, ஜோதிசாமி தெரு, கந்தசாமி தெரு, ம.பொ.சி.சாலை வழியாக மலைப்படிகளில் ஏறி மலைக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, 1,008 பால்குடம் ஊற்றி அபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர், சண்முகர், ஆபத்சகாய வினாயகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், மூலவரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில், நான்கு மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் மலைக்கோவிலுக்கு வந்திருந்தனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்தவர்கள் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வந்தனர். மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், வாகனப் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது. கடும் நெரிசல் காரணமாக, குறைந்தபட்சம் ஒரு வாகனம் மலை உச்சியை சென்றடைய மூன்று முதல், நான்கு மணி நேரம் பிடித்தது.
இதேபோல், முருகன் கோவிலின் உபகோவிலான மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலிலும், தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால் குட அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.