பதிவு செய்த நாள்
15
ஏப்
2013
11:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், உலக நன்மை வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, வழக்கமான திருப்பாவை சாற்றுமறை வழிபாடு மற்றும் அனைத்து சன்னிதிகளிலும், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. உற்சவ மூர்த்திகளான ஸ்தலசயனப் பெருமாள், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார் ஆகியோர், மகா மண்டபத்தில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, உலக நன்மை வேண்டி, திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில், குத்துவிளக்கிற்கு, ஆடை மற்றும் ஆபரண அலங்காரம் செய்து, அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓத, பெண்கள் விளக்கில் தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்தனர். செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, மேலாளர் சந்தானம் உட்பட, பலர் பங்கேற்றனர். இங்குள்ள, மல்லிகேஸ்வரர் கோவிலிலும், சிறப்பு வழிபாடு நடந்தது. திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில், காலையில், வழக்கமான வழிபாடு நடந்தது. டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில், மூன்று மணி நேரம், பக்த பஜனை நடந்தது. பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். கல்பாக்கம் நகரியம், காமாட்சி அம்மன் கோவில், சாய்பாபா கோவில், சதுரங்கப்பட்டினம் மலைமண்டல பெருமாள் மற்றும் வெள்ளீஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும், புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.