கருமத்தம்பட்டி: சூலூர் அருகே உலக மக்கள் நலன் வேண்டி நடந்த, 1008 திருவிளக்கு வழிபாட்டில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். முத்துக்கவுண்டன்புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் மற்றும் கொள்ளுப்பாளையம் மாகாளியம்மன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், ஆன்மிக வழிபாடுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி, உலக மக்கள் நலனுக்காக சங்கோதிபாளையம் பிரிவில், 1008 திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அலகுமலை ஸ்ரீ தபோவனம் ஆசிரம நிறுவனர் குஹப்பிரியானந்த சரஸ்வதி திருவிளக்கு வழிபாட்டை நடத்தி வைத்து பேசுகையில்,"நாட்டில் ஆன்மிக எழுச்சி உண்டாக பெண்களின் பங்கு முக்கியம். குடும்பத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு நற்பண்புகளை போதிக்கவேண்டும். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் உள்ளிட்ட ஆன்மிக பெரியவர்கள் குறித்த வரலாறுகளை கூறவேண்டும். ஆன்மிகம் வளர்ந்தால், நாடு மேன்மை பெறும். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும் வகையில், நீதிக்கதைகளை கூறவேண்டும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடுள்ள இளைய தலைமுறையினால்தான் எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும், என்றார். தொடர்ந்து பக்திப்பாடல்கள் பாடப்பட்டன. பூஜையில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.