பதிவு செய்த நாள்
09
மே
2013
11:05
குளித்தலை: காவிரியாற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், பக்தர்கள் நீராட குளித்தலை நகராட்சி சார்பில் நான்கு இடங்களில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் வசதி செய்யப் பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சித்திரை மாதத்தையொட்டி கோயில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் போது, காவிரியாற்றில் புனித நீர் எடுக்க பக்தர்கள் செல்வதுண்டு. ஆனால், மணலுக்காக தோண்டப்பட்ட குழியின் ஆழம் தெரியாமல், சிலர் புதை மணல் குழியில் சிக்கி இறந்து விடுகின்றனர். சமீபத்தில் தண்ணீர் பள்ளி புற்று மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக புனித நீர் எடுக்க சென்ற நான்கு பக்தர்கள், பெருகமணி அருகே காவிரியாற்றில் மூழ்கி இறந்தனர்.இதையடுத்து, குளித்தலை நகராட்சி சார்பில் காவிரியாற்று பகுதிகளான மணத்தட்டை, கடம்பர் கோயில், விநாயகர் கோயில், பரிசல் துறை உள்ள நான்கு இடங்களில், ஜெனரேட்டர் மூலம் குழியில் இருந்து எடுக்கப்பட்டு, குழாய் மூலம் சப்ளை செயயப்படுகிறது. இதனால், புனித நீர் எடுக்க வரும் பக்தர்கள், மணலுக்காக தோண்டிய குழியில் இறங்காமல், குழாயில் வரும் தண்ணீரில் குளித்து விட்டு, புனித நீர் எடுத்து செல்கின்றனர். "குளித்தலை நகராட்சி சார்பில் காவிரியாற்றில் செய்யப்பட்ட ஏற்பாட்டை போல, மற்ற உள்ளாட்சி அமைப்புகளும், காவிரியாற்றில் ஜெனரேட்டர் மூலம் குழாய் வழியாக தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.