பதிவு செய்த நாள்
03
ஜூன்
2013
10:06
காயார்: காயார் ஆடேரீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி பாழடைந்து வருவதால், அதை உடனடியாக சீரமைத்து, பூஜைகள் நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த காயாரில், பழமை வாய்ந்த சிவாலயமாக ஆடேரீஸ்வரர் கோவில் உள்ளது. திருக்குளத்துடன், மிகப்பெரிய முகப்பு மண்டபம் மற்றும் மதில் சவர்களுடன் விளங்கிய இக்கோவில், தற்போது, கருவறை பகுதியை மட்டும் கொண்டதாக உள்ளது. சிவாலயத்தின் வலதுபுறம் புதைந்துள்ள நான்கு மண்டப தூண்கள், கோவிலின் வரலாற்று சான்றுகளை தெரிவிக்கும் ஆவணங்களாக உள்ளன.ஜெயம்கொண்ட சோழ மண்டல ஆமூர் கோட்டத்து குமுளி நாட்டில் உள்ள காயார் என, கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மே<<லு<ம், கோவிலுக்கு நிலம் கொடை வழங்கியது குறித்த தகவலும் அதில் உள்ளது.ஆடேரீஸ்வரர் கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். எதிரே, நந்தி, பலிபீடம் உள்ளன. அருகே, வேதநாயகி அம்மன் காட்சி தருகிறார். இக்கோவிலுக்கு சொந்தமான, 20 ஏக்கர் நிலம், அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ளது. இதில் கிடைக்கும் வருவாயில், ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது.கோவில் அருகில் உள்ள நீர் வற்றாத திருக்குளம், பராமரிப்பின்றி உள்ளது. கோவிலில், குடமுழுக்கு நடந்து ஒரு நூற்றாண்டிற்கு மேலாகிறது. பாழடைந்து வரும் இக்கோவிலை, சீரமைக்க சமூக ஆர்வலர்களும் அறநிலையத் துறை அதிகாரிகளும் முன்வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.