கோயில்களில் பன்னிரண்டு மாதங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு மாதம் உற்ஸவம் கொண்டாடப்படுகிறது. உதாரணமாக சித்திரை உற்ஸவம் மதுரையிலும், கார்த்திகை உற்ஸவம் திருவண்ணாமலையிலும் என கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை விழாக்கள் நிகழ்கின்றன. இதில் முக்கியமான நிகழ்ச்சி சுவாமி பவனி. கடவுளே பக்தர்களைத் தேடி வந்து அருள்புரிவதாக அர்த்தம். நல்ல மழை பெய்து உலகம் சுபிட்சமாக இருக்கவேண்டியே கோயிலில் திருவிழாக்கள் நிகழ்கின்றன. உலகில் உயிர்களைப் படைப்பவர் பிரம்மா. தாம் படைத்த அனைத்து உயிர்களும் நலமாய் வாழ, ஒவ்வொரு ஊரிலும் பிரம்மாவே உற்ஸவம நடத்துவதாக ஐதீகம். பத்து நாட்களுக்குக் குறையாமல் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை இது நடத்தப்படும். பிரம்மா நடத்தும் உற்ஸவம் பிரம்மோற்ஸவம் எனப்பட்டது.