சோலைமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2013 11:07
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவிலில் ரூ.5 கோடி மதிப்பில் கும்பாபிஷேக பணிகள் நடப்பதற்கான, பாலாலய பூஜை நேற்று நடந்தது. இக்கோவிலில் 2002ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 11 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி உபயதாரர்கள் மூலம் பணிகள் நடத்தவும், அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யவும் ஜூன் 20ல் தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதைதொடர்ந்து, திருப்பணிகள் துவங்குவதற்கான பாலாலய பூஜை நேற்று துவங்கியது. ராஜா பட்டர், பாலகணபதி பட்டர் தலைமையில் 33 சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர். தக்கார் வெங்கடாஜலம் கூறியதாவது: கோபுரங்கள், விமானம், சுதைகள், பலி பீடம் அனைத்தும் புதுப்பிக்கப்படும். மகா மண்டப தூண்கள் வீடுகளில் உள்ளது போல் உள்ளன. கோவில்களில் உள்ளவை போல் அவற்றில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிலைகள் அமைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக கோவில் வடபகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய தங்குமிடம், சஷ்டி மண்டபம் அமைக்கப்படும். கோவில் முன் வாகனங்கள் நிறுத்தும் இடமும், தெற்கில் சிறுவர் பூங்காவும் அமைக்கப்படுகிறது. பெரும்பாலான பணிகள் உபயதாரர்கள் மூலம் நடக்கிறது. விரைவில் பணிகள் முடிந்து 2014 ஏப்ரலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார். துணை கமிஷனர் வரதராஜன், சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.