பதிவு செய்த நாள்
16
ஜூலை
2013
11:07
பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில் அமைந்துள்ள சாந்தநாயகி அம்பாள் சமேத ஆதிபுரீசுவரர் கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று, விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேளச்சேரி – தாம்பரம் சாலை, பள்ளிக்கரணையில் அமைந்து உள்ளது, சாந்தநாயகி அம்பாள் சமேத ஆதிபுரீசுவரர் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ராகு, கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. கடந்த, 1999ல், இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதை அடுத்து, பிரகார மண்டபம், ஆஞ்சநேயர், நாயன்மார்கள், நடராஜர் சன்னிதிகள், மூன்று நிலை கொண்ட 39 அடி உயரம் கொண்ட முகப்பு கோபுரம், 27 அடிகள் கொண்ட கொடி மரம் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் இக்கோவிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு கும்ப நீர் தெளிக்கப்பட்டது. நேற்று மாலை, திருக்கல்யாண உற்சவம், சுவாமியின் வீதி உலா புறப்பாடு ஆகியவை நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை சாந்தநாயகி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.