பதிவு செய்த நாள்
28
ஆக
2013
10:08
சென்னை: சென்னையில், ராபர்ட் புரூஸ் புட் அகழாய்வில், கண்டெடுத்த கைக்கோடரியே, தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை நிரூபிக்க, உதவியது,’’ என, ‘இன்டாக்’கின், தமிழக குழு தலைவர், சுரேஷ் கூறினார். சென்னை பல்கலை, பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில், சென்னை தினம் கொண்டாடப்பட்டது. அதில், ‘இன்டாக்’ அமைப்பின், தமிழக குழு தலைவர், சுரேஷ் சிறப்பு விருந்தினராக, கலந்து கொண்டார். துறை தலைவர், பாலாஜி தலைமை வகித்தார்.
முதல் கைக்கோடரி: அதில், சுரேஷ் பேசியதாவது: தமிழக தொல்லியல் ஆய்வுகளில், சென்னையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. 1863, மே, 31ம் தேதி அன்று, சென்னையை அடுத்த பல்லாவரத்தில், ராபர்ட் புரூஸ் புட் அகழாய்வு செய்தார். அடிப்படையில் மண்ணியல் ஆய்வாளரான அவர், தனது துறை தொடர்பாகவே, அகழாய்வு செய்தார். அங்கு, வேட்டையாடுவதற்கும், பிற காரியங்களுக்கு பயன்படுத்தப்படும், கைக்கோடரி கண்டெடுக்கப்பட்டது. இதுவே, தெற்காசிய ஆய்வுகளில், முதன் முதலில் கண்டெடுக்கப்பட்ட, கைக்கோடரி. ராபர்ட் புரூஸ் புட்டுக்கு, அவருடைய நண்பர் வில்லியம் கிங், துணையாக இருந்தார். பின்னாளில், வில்லியம் கிங்கும் தனியாக தொல்லியல் ஆய்வுகளில், ஈடுபட்டார். அந்த ஊக்கமே, 1880ல், ஆதிச்ச நல்லூரில் நடந்த அகழாய்வில், வில்லியம் கிங் ஈடுபட ஊக்கம் கொடுத்தது. சென்னையில் உள்ள, பல்வேறு இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக, மயிலாப்பூர், சாந்தோம், சேத்துப்பட்டு போன்றவை, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்.
நாணய தொழிற்சாலைகள்: கடந்த, 1929ல், கீழ்ப்பாக்கத்தில், பிரெஞ்சுக்காரரின் வீட்டில், பெருங்கற்கால காலத்திய, பொருட்கள் இருந்தன. தொல்லியல் துறை சார்பில், அலெக்சாண்டர் ரியாவும், அவருடன் ராகவன், ஆராவமுதன் ஆகியோரும், அகழாய்வில் ஈடுபட்டனர். அதில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பல்வேறு பொருட்கள் கிடைத்தன. அங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை, ஜார்ஜ் டவுன், திருவான்மியூர், மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, பூந்தமல்லி போன்ற இடங்களில், நாணய தொழிற்சாலைகள் இருந்தன. பல இடங்களில், நடமாடும் நாணய தொழிற்சாலைகளும் இருந்துள்ளன. இருப்பினும், வடசென்னையில் உள்ள, நாணய தொழிற்சாலை மட்டுமே, பெரும்புகழ் பெற்றது.
திருவான்மியூரில்...: கடந்த, 1883ல், சைதாப்பேட்டையில், ரோமானிய நாணயங்கள் கிடைத்தன. கிடைத்த இடம் தெரியவில்லை; எனினும், அங்குள்ள, காரணீஸ்வரரர் கோவில் பகுதியில், அந்த நாணயங்கள் கிடைத்தன என்ற, யூகமான முடிவுக்கு வரலாம். கடந்த, 1979ல், சுதந்திர தினம் கொண்டாடுவதற்காக, திருவான்மியூர் அரசு பள்ளியில், பள்ளம் தோண்டப்பட்ட போது, பல்வேறு வகையான, ரோமானிய நாணயங்கள் கிடைத்தன. அதேபோல், புனித ஜார்ஜ் கோட்டையிலும், ஜார்ஜ் டவுனிலும், நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.