சென்னை கபாலீஸ்வரர், மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா கோலாகல துவக்கம்
பதிவு செய்த நாள்
24
மார் 2026 10:03
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில் பங்குனிப் பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. கபாலீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, நேற்று காலை கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து, திரளாக வந்த பக்தர்களின் சிவநாமம் விண்ணை பிளக்க கொடியேற்ற நிகழ்வு நடந்தது. நாளை காலை அதிகாலை 6:00 மணிக்கு அதிகாரநந்தி காட்சி; 29ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6:00 மணிக்கு கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்கிறார். வரும், 30ம் தேதி திருஞான சம்பந்தர் எழுந்தருளல், எலும்மை பூம்பாவையாக்கி அருளல் நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் இறைவன் 63 நாயன்மார்களோடு திருக்காட்சி நடக்கிறது. ஏப்., 1ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. மருந்தீஸ்வரர் கோவில் அதேபோல, மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை அதிகார நந்தி சேவையும், 29ம் தேதி காலை 7:10 மணிக்கு சந்திரசேகரர் தேர்திருவிழாவும், பிரம்மனுக்கு காட்சியருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பரிவேட்டை விழா வரும் 30ம் தேதியும், 31ம் தேதி கல்யாணசுந்தரர் திருக்கல்யாணமும், ஏப்., 1ம் தேதி திரிபுரசுந்தர சுந்தரி- தியாகராஜர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று இரவு 9:00 மணிக்கு கொடியிறக்கத்துடன், வால்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி வீடுபேறு அளித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் கடைசி நாளான ஏப்., 2ம் தேதி சந்திரசேகர் தெப்பத் திருவிழா, வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, 18 திருநடன காட்சி, பெருஞ்சிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
|