பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
பந்தலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில், எட்டு யானைகளை பங்கேற்க செய்து, விநாயகர் சதுர்த்தி பூஜை நடத்தப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில், 24 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நாளன்று, 24 யானைகள் பங்குபெறும் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்தாண்டு, இந்த பூஜை நடத்தப்படவில்லை. நடப்பாண்டில், விநாயர் சதுர்த்தி நாளில், இப்பூஜையை நிறுத்த வனத்துறையினர் முடிவு செய்திருந்தனர். இதற்கு, பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்த நிலையில், நேற்று மாலை, 8 யானைகள் மட்டும், தெப்பக்காடு முகாமுக்கு அழைத்து வரப்பட்டன. மசினி யானை, விநாயகர் கோவிலில் பூஜை செய்தது. தொடர்ந்து, 8 யானைகளும் வரிசையாக நிறுத்தப்பட்டு பொங்கல், கரும்பு, வெல்லம் உட்பட உணவு வகைகள் வழங்கப்பட்ட பின், 6:15 மணிக்கு பூஜை நிறைவு பெற்றது. வனச்சரகர் புஷ்பாகரன், கால்நடை மருத்துவர் விஜயராகவன் மட்டுமே பங்கேற்றனர். உயரதிகாரிகள் பங்கேற்கவில்லை.