பதிவு செய்த நாள்
16
செப்
2013
10:09
ஈரோடு: ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவிலில், நேற்று புரட்டாசி பிறப்பை முன்னிட்டு, பீடங்களை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தை பெருமாளுக்கு உகந்த மாதமாக, இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்த்து, விரதம் கடைபிடித்து, பெருமாளை வழிபட்டால், குடும்பத்தில் நன்மை பிறக்கும் எபது ஐதீகம். பொதுவாக அனைத்து சனிக்கிழமையுமே பெருமாளுக்கு உகந்த கிழமை. ஆனால், புரட்டாசியில் அரக்கனை அழித்து பூமாதேவியை காப்பாற்றியதால், புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபடுவது மிகவும் விஷேசமானதாகும். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் விஷேசமாக இருக்கும். புரட்டாசி மாதத்தில், சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவில்கள், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்தாண்டு புரட்டாசி மாதம், நாளை (17ம் தேதி) பிறக்கிறது. இதனையொட்டி, ஈரோடு கோட்டை அரங்கநாதர் கோவிலில் உள்ள சிலைகள், பிரபாவளி, குத்துவிளக்கு சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிறப்பை முன்னிட்டு, பிரபாவளி, சிலைகள், குத்துவிளக்குகள், பீடங்கள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். நாளை, புரட்டாசி மாதம் பிறப்பதால், மகாலட்சுமி, ஆண்டாள், வரதராஜ பெருமாள் உள்பட அனைத்து சிலைகள், குத்துவிளக்குகள், பீடங்களை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கோவில் வளாகத்துக்குள் மேற்கூரைகள், பந்தல் அமைக்கப்பட்டு, புரட்டாசி சனிக்கிழமை தோறும் பக்தர்கள் வரிசையில் நின்று, பெருமாளை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும், என்றனர்.