பதிவு செய்த நாள்
20
செப்
2013
11:09
திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், நிர்வாக குழு கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அய்யப்ப பக்த ஜன சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் மணி வரவேற்றார். பொருளாளர் முருகேசன், துணை தலைவர் கோபால், துணை செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், திருப்பூர் ஐயப்பன் கோவிலுக்கு முன், கட்டடங்களுக்கு இடையூறாக 100 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது. ஆண்டிபாளையம் குளத்தை தூர்வாரி, பறவைகளுக்காக இரண்டு திட்டுக்கள் அமைத்து, அதில் மரம் நட திட்டமிடப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இம்மரத்தை பாதுகாக்கும் பொருட்டும், பயனுள்ளதாக இருக்கும் வகையிலும், அரச மரத்தை வேருடன் பெயர்த்து, கொண்டு சென்று, குளத்தின் பறவைகளுக்கான திட்டில் நடவு செய்வது; குளம் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள வெற்றி, வளம், முயற்சி, பி.ஏ.ஐ., அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு இப்பணியை மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், அக்., 14ம் தேதி, வித்யா ரம்பம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது; கார்த்திகை முதல் தேதி துவங்கும் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.