பதிவு செய்த நாள்
23
செப்
2013
11:09
முசிறி: மனிதர்களுக்கு கெட்ட எண்ணங்கள் ஏற்படும்போது, இறைவனை துதித்தால் தீய எண்ணங்கள் விலகிச் செல்லும், என, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி பேசினார். மீனாட்சி திருமண மண்டபத்தில், வாழும் கலை அமைப்பின் முசிறி கிளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், நிறுவனர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி பங்கேற்று சொற்பொழிவாற்றி அருளாசி வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: உங்கள் கவலைகளை என்னிடம் கொடுத்து விடுங்கள். வாழ்க்கையில் பொறுமையாக இருங்கள். நினைப்பது அனைவருக்கும் கிடைக்கும். பொது சேவை செய்யுங்கள். நாட்டை பற்றி கவலைப்படுங்கள். விலைவாசி அதிகமாகி விட்டது என்பது பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விலைவாசி குறையும். சுதர்ஷனகிரியா தியானம் செய்தால் மது குடிப்பதை விட அதிக இன்பம் கிடைக்கும். சிரித்த முகத்துடன் மலர்ச்சியாக இருங்கள். நீங்கள் நினைப்பது அனைத்தும் கிடைக்கும். மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க தியான பயிற்சி மிகவும் உதவுகிறது. முசிறி பகுதி மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், முசிறி, தா.பேட்டை, துறையூர், குளித்தலை, பெரம்பலூர், தொட்டியம், காட்டுப்புத்தூர், கொளக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழும் கலை அமைப்பினரும், பொதுமக்கள் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வாழும் கலை அமைப்பின் ஆசிரியர் டாக்டர்கள் பார்த்திபன், மீரா, சுப்பிரமணியன் மற்றும் அமைப்பை சேர்ந்த அன்பழகன், தியாகராஜன், சந்திரசேகர், செல்வரத்தினம் உட்பட பலர் செய்திருந்தனர்.