பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி ஜெயமங்களா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2013 11:09
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரி கிராமத்தில் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு பிராச முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சரபசூளினி அம்மன் தனிசன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். சரபசூளினியின் சிரசிலிருந்து தானாக எலுமிச்சை கீழே இறங்கி வரும் அதிசய நிகழ்வு இன்றளவும் நடக்கிறது. சிறப்புபெற்ற இவ்வாலயத்தில் சரபசூளினிக்கு பௌர்ணமி தோறும் ஜெயமங்களா யாகம் நடைபெறுவது வழக்கம். பில்லிசூன்யம், ஏவல், கர்மவினைகள் அகலுதல், வழக்குகளில் வெற்றி, திருமணத்தடை அகலுதல் போன்ற காரியங்கள் ஜெயமங்களா யாகத்தின் மூலம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதனால் பௌர்ணமி ஜெயமங்களா யாகத்தில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கான வெளியூர் மற்றும் வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்கின்றனர். அதன்படி, பௌர்ணமி தினத்தையொட்டி மாலை ஜெயமங்களா யாகம் நடந்தது. முன்னதாக சரபசூளினிக்கு சிறப்பு புஷ்பலங்காரம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடந்தது. பரம்பரை அறங்காவலர் நாகராஜசிவாச்சாரியார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் ஜெயமங்களா யாக பூஜைகளை செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நிறைவாக அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் நாகராஜகுருக்கள் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர்.