பதிவு செய்த நாள்
14
அக்
2013
10:10
பழநி: பழநி நவராத்திரி விழாவில், மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் புறப்பாடு, வன்னிகா சூரன் வதம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநியில் நவராத்திரி விழா அக்., 5 ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று பராசக்திவேல் புறப்பாடு, வன்னிகா சூரன் வதத்தை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடக்கும், சாயரட்சை பூஜை, முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு நடந்தது. அதன் பின், இரவு 11 மணி வரை, மலைக்கோயில் சன்னதி நடை சாத்தப்பட்டது. மலைக்கோயிலிருந்து பராசக்திவேல் படிப்பாதை வழியாக, கீழே கொண்டு வரப்பட்டு, ஊர்வலமாக, பெரியநாயகியம்மன் கோயிலுக்கு எடுத்துச்சென்றனர். அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேல், கேடயம், வில், அம்புடன் கோதை மங்கலத்திற்கு புறப்பட்டார். சூரன் வதம்: கோதை மங்கலம் கோதையீஸ்வர ஆலயம் முன், புலிப்பாணி பாத்திர சுவாமிகள், துர்க்காவாக அவாகனம் ஆகி, வாழை மரம் மற்றும் வன்னி மரத்தில் அம்பு எய்து, வன்னிகா சூரன் வதம் நடந்தது. முத்துகுமாரசுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக்கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கு வந்த பின், நள்ளிரவில், அர்த்தசாம பூஜை நடந்தது.