பதிவு செய்த நாள்
29
நவ
2013
11:11
திருச்செங்கோடு: திருச்செங்கோடு பகுதியில் உள்ள கோவிலில், தக்கார் பொறுப்பேற்க வந்த அலுவலரை, கோவில் நிர்வாகி மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர். திருச்செங்கோடு அடுத்த சட்டையம்புதூர் பகுதியில் உள்ள மாரியம்மன் மற்றும் முத்துகுமாரசாமி கோவில், 2004ம் ஆண்டு முதல், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. கோவிலுக்கு சொந்தமான, 5.72 ஏக்கர் நிலம் மற்றும் உடைமைகளை, சிலர் அபகரிப்பதாக, புகார் சென்றது. அதையடுத்து, காளிப்பட்டி கந்தசாமி கோவில் செயல் அலவலர் சீனிவாசன், சட்டையம்புதூர் மாரியம்மன், முத்துகுமாரசாமி கோவில் தக்காராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று, பொறுப்பேற்பதற்காக, உதவி ஆணையர் கிருஷ்ணன், ஆய்வாளர் உதயகுமார், செயல் அலவலர்கள் ஆறுமுகம், பரமேஸ்வரன் ஆகியோருடன் சென்றார். அப்போது, அதிகாரிகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தகவலறிந்த, திருச்செங்கோடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "எங்களது பராமரிப்பில் காலங்காலமாக இருந்து வரும் கோவிலை, ஊர் மக்கள் அனுமதி இல்லாமல், தக்கார் வசம் ஒப்படைக்க முடியாது என, பொதுமக்கள் தெரிவித்தனர். அதனால், தக்கார் பொறுப்பேற்காமல் திரும்பிச் சென்றார். உதவி ஆணையர் கிருஷ்ணன் கூறியதாவது: காளிப்பட்டி கந்தசாமி கோவில் செயல் அலவலர் சீனிவாசனை, கூடுதல் பொறுப்பு தக்காரக நியமித்துள்ளோம். அவர் பொறுப்பேற்க காலஅவகாசம் தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டதால், தக்கார் இன்று (நேற்று) பொறுப்பேற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.