பதிவு செய்த நாள்
20
டிச
2013
11:12
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ஆருத்ரா விழாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபையாகும். ரத்தினசபை என்றழைக்கப்படும் இக்கோவிலில், ஆருத்ரா தரிசனம், நேற்று முன்தினம் நடந்தது.மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே, ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, ரத்தின சபாபதி பெருமான், ஸ்தல விருட்சத்தின் கீழ், புதிதாக நிர்மாணித்துள்ள, ஆருத்ரா அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் விழா துவங்கியது. தொடர்ந்து, கதம்பத் தூள், நெல்லிப் பொடி, வில்வப் பொடி, சாத்துக்குடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம், 33 வகையான அபிஷேகங்கள் நடந்தன.பின், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, தீபாராதனை, மற்றும் கோபுர தரிசனம் நடந்தன. தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில், உற்சவர் எழுந்தருளினார். இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வருவாய் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நேற்று மதியம் 1:00 மணிக்கு, அனுக்க தரிசனம் நடந்தது. துாரத்தில் அமர்ந்திருந்த பக்தர்களும், அபிஷேகத்தை காணும் வகையில், ஆங்காங்கே வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.தினமலர் நாளிதழ் சார்பில், அதிகாலையில், 2,500 பக்தர்களுக்கு, வெண்பொங்கல், கேசரி வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி, திருவள்ளூர் அரசு போக்குவரத்து பணிமனை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.விழாவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் மற்றும் ஆந்திர மாநிலம் சித்துார் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.