பதிவு செய்த நாள்
08
ஜன
2014
03:01
சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்குக்கு முன்னோடியாக, எருமேலி சந்தனக்குடம் ஜன., 10லும், பேட்டைதுள்ளல் ஜன., 11லும் நடைபெறுகிறது. ஜன.,12ல் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்படுகிறது.வரும் ஜன.,14ல், சபரிமலையில் மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சன்னிதானத்தில் நடந்து வருகிறது. மகரஜோதி தரிசனத்துக்காக, சன்னிதானத்தில் மட்டும் பக்தர்கள் கூடியிருக்காமல், ஜோதி தெரியும் பிற இடங்களுக்கு அனுப்பி வைக்க தேவசம்போர்டும், போலீஸ் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னோடியாக, எருமேலி சந்தனக்குட பவனி, ஜன., 10 ல் நடக்கிறது. எருமேலி பள்ளி வாசலில் 5 யானைகள் மீது நிர்வாகிகள் அமர்ந்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று காணிக்கை வசூலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன.,11 ல் பகல் 12:00 மணிக்கு, அம்பலப்புழா பக்தர்களும், மாலை 3:00 மணிக்கு ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுகின்றனர். ஜன.,12ல், பந்தளத்தில் உள்ள வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து பகல் 12:00 மணிக்கு உச்சபூஜைக்கு பின், திருவாபரண பவனி புறப்படுகிறது. இதற்காக, திருவாபரணம் செல்லும் காட்டுப்பாதையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.சபரிமலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மரக்கூட்டம், சன்னிதானம் பெரிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் பக்தர்களை கட்டுப்படுத்த, போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். இனி வரும் பக்தர்கள் ஜோதி தரிசனத்துக்காக, சன்னிதானத்தில் தங்குவர் என்பதால், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.