மேல்மலையனூர் அங்காளம்மன் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் அண்ணாமலையார் அலங்காரம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2025 01:11
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்ககவச அலங்காரமும், சிறப்பு நெய் வேத்யமும் நடந்தது. இரவு 11 மணிக்கு அண்ணாமலையார், உன்னாமுலையம்மன் அலங்காரத்தில், சிவ வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பூசாரிகள் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். 12.00 மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழுத்தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி.சரவணன் சரவணன் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, வேலூர், புதுச்சேரி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் ,சிறப்பு பஸ்களை இயக்கினர்.