பதிவு செய்த நாள்
15
ஜன
2014
10:01
சபரிமலை: சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் மலை இறங்கினர். சபரிமலையில் மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. டிச., 30- ல் தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று, மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. அதிகாலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய் அபிஷேகம், காலை 11 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின், கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு, உச்சபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மகரசங்கரம பூஜை சடங்குகள் நடைபெற்றது. மதியம் 1.14 மணிக்கு, திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய், ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த பூஜை முடிந்து, 2 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின், மாலை 5 மணிக்கு நடை திறந்ததும், திருவாபரணத்தை வரவேற்க செல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மாலை அணிவித்து, வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து ஜன., 12 ல், புறப்பட்ட திருவாபரண பவனி, நேற்று மாலை 5.30 மணிக்கு, சரங்குத்தி வந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் முறைப்படி வரவேற்பு கொடுத்த பின், அங்கிருந்து புறப்பட்ட பவனி, மாலை 6.25 மணிக்கு சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க, 18 -ம் படி வழியாகல ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஸ்ரீகோயில் முன், திருவாபரண பெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, நடை திறந்து தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்ததும், சன்னிதானத்தில் குழுமியிருந்த பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில், மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதைக் கண்ட பக்தர்கள், சரணம் ஐயப்பா என, கோஷமிட்டனர்; மூன்று முறை, மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், புல்மேட்டில், மகர ஜோதி தரிசனத்துக்கு பின் நடைபெற்ற விபத்தில், 102 பேர் இறந்ததால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
வருமானம் உயர்வு: நடப்பு மண்டல-, மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் மொத்த வருமானம், 181 கோடியாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டை விட, 26 கோடி ரூபாய் அதிகம். இந்த சீசன் முடிவடையும் போது, மொத்த வருமானம் 200 கோடி ரூபாயை தாண்டும், என, தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர் கூறினார்.