ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 12:04
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் திருவிழா கொடியோற்றம், கடந்த, 5ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். 9ம் தேதி பங்குனி உத்திரத்தன்று தாயார்-நம்பெருமாள் சேர்த்தி வைபவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை நடந்தது. காலை, 9.45 மணிக்கு நம்பெருமாள் தாயார் சன்னதியிலிருந்து புறப்பட்டு, ரதரோஹணம், ரத யாத்திரை நடந்தது. நம்பெருமாள் பங்குனி தேரில் எழுந்தருளினார். 11 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு சித்திரை வீதிகளில் தேர் வலம் வந்து, மதியம் நிலையை அடைந்தது. இத்திருவிழாவை காண வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவித்தனர். தவிர, தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாள் என்பதாலும், தேர் திருவிழாவை காணவும் பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்தனர்.