பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
திருவெண்ணெய்நல்லூர்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் இன்று நடக்கும் சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தாலிக்கட்டிக்கொள்கின்றனர். கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கடந்த 29ம் தேதி சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது. 30ம் தேதி பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலிக்கட்டும் நிகழ்ச்சியும், 11ம்தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம், 12ம் தேதி கம்பம் நிறுத்துதல் நடந்தது. முக்கிய திருவிழாவான இன்று இரவு சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா மற்றும் பல மாநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். நாளை (14 ம்தேதி) காலை 6.30 மணிக்கு நடக்கும் தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். அப்போது திருநங்கைகள் தேர் செல்லும் வழியில் 108 தேங்காய்கள் வைத்தும், குவியல் குவியல்களாக கற்பூரங்களை ஏற்றியும் கும்மியடிப்பர். தேரோட்டத்தின் போது விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை சுவாமி மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்துவர். தொடர்ந்து நத்தம், தொட்டி வழியாக தேர் பந்தலடிக்கு சென்றடைகிறது. அங்கு மதியம் 12 மணிக்கு அழுகளம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு உறுமைசோறு (பலிசாதம்) படையல் நடக்கிறது. இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்து வாங்குவர். மாலை 7 மணிக்கு காளிக்கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்கு கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்வித்து நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது. விழாவை முன்னிட்டு சென்னை, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.