பதிவு செய்த நாள்
13
மே
2014
02:05
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா மே 9ல் துவங்கியது. தொடர்ந்து நான்கு நாட்கள் பெருமாள், சிம்மாசனத்தில் கோயிலை வலம் வந்தார். இன்று காலை 10.31 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித தீர்த்த குடங்கள் புறப்பாடாகிறார் பின்னர் மூலவர் பரமஸ்வாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள் மற்றும் காவல் தெய்வம் கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 2 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் "கள்ளழகர் திருக்கோலத்துடன், புஷ்பபல்லக்கில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து கருப்பண்ணசாமியிடம் விடைபெற்று, வாண வேடிக்கைகள் முழங்க, ஆயிரக்கணக்கான தீவட்டிகள் வெளிச்சத்தில், வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். மறுநாள் காலை 7 மணிக்கு தல்லாகுளம் மண்டகப்படியில் சேர்க்கையாகிறார். அன்றைய தினம் காலை 9 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடிக்க, நாள் முழுவதும் நகரை வலம் வருகிறார். மதியம் 2 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, இரவு 9 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைகிறார். மே 15 ல் இரவு மண்டூக மகரிஷி சாபவிமோசனம், இரவு தசாவதார சேவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் செய்து வருகின்றனர்.