பதிவு செய்த நாள்
04
ஜூலை
2014
04:07
சதாசிவ மூர்த்தியை பஞ்சப் பிரம்ம மந்திரத்தினால் தியானிக்கும் போது ஐந்து முகங்களும் ஓருருவாக அமையாமல் தனித்தனியே முழு வடிவமுள்ள மூர்த்திகளாகக் கருதப்படும். ஈசான மூர்த்தி- பளிங்கு நிறமுடையவர். முக்கண்களைக் கொண்டவர். ஞானச் சந்திரனை சடையிலணிந்தவர். சூலம், அபயமுத்திரை ஏந்தியவர். பார்வதியுடன் காணப்படுபவர். அழகும் பிரசன்னமும் உள்ளவர். தத்புருட மூர்த்தி- பொன்னிறத்தையுடையவர். பீதாம்பரத்தையும், உபவீதத்தையம், சடையில் இளம் பிறையையும் தரித்தவர். மாதுளங்கனி, ருத்திராட்ச மாலையைக் கரங்களில் ஏந்தி கவுரியுடன் காணப்படுபவர். அகோரமூர்த்தி- முக்கண்ணர் திருமுடியில் சந்திரனைச் சூடியவர். குண்டலம் தரித்தவர். கீரிநிறமுடையவர். மீசை, தாடி விரிசடையுடன் உக்கிர முகத்தினைக் கொண்டவர். வலது கரங்களில் சூலம், பரசு, வாள், தாண்டவம் இருக்க, இடது கரங்களில் கட்டுவாங்கம், கபாலம், புரிசை, பாசம் ஏந்தியவர். கபாலம், பாம்பு, விருச்சிகம் (தேள்) போன்றவற்றை ஆபரணங்களாகச் சூடியவர். சத்துருக்களை அழிப்பவர். கங்கையுடன் கூடியவர். இட்ட சித்திகளைக் கொடுப்பவர். வாமதேவ மூர்த்தி- சிவந்த நிறத்தவர். நறுமணம் பொருந்தியமாலை, வஸ்திரம், உபவீதம், தலைப்பாகை அணிந்தவர். கணாம்பிகையுடன் கூடியவர். வாள், புரிசைகளை கரங்களில் ஏந்தியவர்.
சத்தியோஜாத மூர்த்தி- வெண்மை நிறத்தவர். வெண்முத்து, மலர் மாலைகள், சந்தனம், ஆபரணம், தலைப்பாகை, வஸ்திரம் ஆகியன தரித்தவர். திரிநேந்திரர் வரத, அபயகரங்களைக் கொண்டவர். பிறைச் சந்திரனைத் தரித்தவர். அம்பிகையுடன் கூடியவர். பால வடிவினர். மந்திரமயமான தியான வடிவில், சதாசிவமூர்த்தியின் வடிவம் எவ்வாறு அமையலாம் என்பது பற்றி ஆகமங்கள் கூறுகின்றன. ஐந்து திருமுகங்களும், பத்துத் திருக்கரங்களும் உடையவர். ஒவ்வொரு முகத்திலும் மும்மூன்று திருக்கண்கள் உண்டு. வலக்கரங்களில் சூலம், வச்சிரம், கத்தி, பரசு, அபயமுத்திரையும்; இடது கரங்களில் பாசம், மணி, அக்கினி, அங்குசமும் தாங்கியிருப்பவர். பாம்பினைப் பூணூலாக அணிந்தவர். பிறைச் சந்திரனால் அலங்கரிக்கப்பட்ட சடாமகுடம் உடையவர். சாந்தமான தோற்றத்தினர். இவ்வாறு காமிகாகமத்தில் சதாசிவனது வடிவம் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஐந்து திருமுகங்கள் உடைய சதாசிவமூர்த்தி இருபத்தைந்து திருமுகங்களும், ஐம்பது கரங்களும் கொண்டு காட்சி தரும்போது, மகாசதாசிவர் என்றழைக்கப்படுவார். தத்துவநிதி என்னும் நூல், மகா கயிலாயமூர்த்தி என்ற பெயரில் மகாசதாசிவ வடிவத்தை விளக்கிக் கூறுகின்றது. பரமனின் இந்த வடிவினை முதன் முதலில் தரிசித்தவள் பார்வதி எனவும் சொல்லப்பட்டுள்ளது. மலர்ந்த தாமரை மீது 25 முகங்கள் 50 கரங்களுடன் விசித்திரமாக ரத்தின அணிகள் சூடி, எண்ணற்ற சூரியர்களிடத்துக் காணப்படும் பேரொளியை உடையவராய் மெய்யெல்லாம் வெண்ணீறு, பாம்புப் பூணூல், முகங்கள் தோறும் முக்கண்களுடன் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடக்கி அமைந்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. இவரது 50 கரங்களில் இடம் பெற்றிருக்கும் பொருட்களையும் இந்நூல் குறிப்பிட்டுள்ளது. அதன்படி மகாசதாசிவரின் வலது கரங்களில் அபயம், சக்கரம், சூலம், உளி, அம்பு, கதை, தாமரை, கத்தி, தோமரம், சத்தி, பிராசம், கோடாரி, பாம்பு, கலப்பை, அங்குசம், அக்கமாலை, சிறுசுத்தி, கொடி, தண்டம், வச்சிரம், குந்தம், அஸ்திதம், ஷட்ரம், ரம்பம், பிண்டி, பாலம் போன்றவையும் இடது பக்கக் கரங்களில் வரதம், வில், மான், சங்கம், கேடயம், பாசம், பரசுவதம், முத்கரம், உடுக்கை, மணி, சுவடி, உருத்திர வீணை, கபாலம், முண்டம், கட்வாங்கம், பூசுண்டி, பரிகம், பலகை, பட்டசம், பிரம்பு, கமண்டலம், அனல், கத்தரிக்கோல், உலக்கை, மயில்தோகை ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இத்தகைய மகா சதாசிவமூர்த்தங்களை தரிசிப்பதும், வணங்குவதும் இஷ்டசித்திகள் யாவும் தரும் என்பது ஐதிகம். இம்மூர்த்தியின் 25 முகங்களும் 9,7,5,3,1 என்ற எண்ணிக்கை வரிசையில் ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும். மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோயிலிலே அங்கயற்கண்ணம்மை யின் கிழக்கு முதல் கோபுரத்திலும், தஞ்சாவூர் வைத்தீஸ்வரன் கோயிலிலே தெற்குத் தென்பக்கத்திலும் மகாசதாசிவ மூர்த்தியின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. அரிதிலும் அரிதாக மகா சதாசிவன் பஞ்சலோகத் திருமேனியராக திருச்சியில் உள்ள வடபத்ர காளியம்மன் கோயிலின் மகாமண்டபத்தில் வடக்குப் பகுதியில் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். இந்தத் திருமேனியின் முன் அமர்ந்து சில நிமிடங்கள் வேண்டி தியானம் செய்தால் நினைத்த காரியம் கை கூடும் என பக்தர்கள் கூறுவது நிஜமே !