பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நொச்சிவயல் ஊரணிகளில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட பிற பகுதிகளில் 33 விநாயகர் சிலைகள் சிறியதும், பெரியதுமாக வைக்கப்பட்டிருந்தன. இச்சிலைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று, இந்து முன்னணி சார்பில் அனைத்து சிலைகளும் மேள, தாளம் முழங்க வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழி நெடுகிலும் பெண்கள் தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டனர். வழிவிடு முருகன் கோயிலில் முன்பு பா.ஜ., அமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ராஜூலு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ராமர் சேது பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் குப்புராமு, ஆர்.எஸ்.எஸ்., மாநில செயலாளர் ஆடலரசன், இந்து முன்னணி மாநில பேச்சாளர்கள் ரத்தினசபாபதி, கங்காதரன், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் துரைக்கண்ணன், மாவட்ட தலைவர் சண்முகராஜா, நகர் தலைவர் சூரியபிரகாஷ், நகர் பொறுப்பாளர் கோட்டைச்சாமி, மண்டபம் ஒன்றியத் தலைவர் நம்புராஜன், மீனவரணி மாநில செயலாளர் காந்தி உட்பட பலர் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம் நொச்சிவயல் ஊரணியில் சிலைகள் கரைக்கப்பட்டன. கூடுதல் எஸ்.பி., வெள்ளைத்துரை, டி.எஸ்.பி., அண்ணாமலை ஆழ்வார் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.