பதிவு செய்த நாள்
14
நவ
2014
10:11
சபரிமலை : சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. இதற்காக 16-ம் தேதி மாலையில் நடைதிறந்து புதிய மேல்சாந்திகள் பதவியேற்கின்றனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில் ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 17-ம் தேதி கார்த்திகை பிறந்து மண்டலகாலம் தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை 16-ம் தேதி மாலை திறக்கிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை- கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, மாளிகைப்புறம்- கேசவன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டு ஏந்தி ஸ்ரீகோயில் முன்புறம் வருவர். மாலை 6.30 -க்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்கு அழைத்து செல்வார். வேறு விசேஷபூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
17-ம் அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய்யபிஷேகம் தொடங்கும். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும். மண்டலசீசனில் திரண்டு வரும் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிரசாதம் தட்டுப்பாடு வராமல் இருப்பதற்காக டந்த 15 நாட்களாக பிரசாதம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சபரிமலையில் தங்கும் அறையுடன், அபிஷேகம், வழிபாடுகள், பிரசாதம் போன்றவற்றுக்கும் இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் புக்கிங் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைய தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கும் குழந்தைகள், மற்றும் முதியவர்களுக்காக தனி ‘கியூ’ வசதி செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் அவசரமாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி, திருவனந்தபுரத்தில் தேவசம்போர்டு மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரமாநில அதிகாரிகளுடன், பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் வசதிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அன்னதானம் அதிகரிக்கப்படுகிறது. புதிதாக கட்டப்படும் அன்னதானம் மண்டபங்களில் 5 ஆயிரம் சதுர அடியில் இந்த சீசனில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.