பதிவு செய்த நாள்
17
நவ
2014
12:11
சபரிமலை:சரண கோஷங்கள் முழங்க சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. இனி தொடர்ச்சியாக 41 நாட்கள் பூஜைகள் நடைபெறும். புதிய மேல்சாந்திகளும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். சபரிமலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை 5:30-க்கு திறந்தது. கடந்த ஒரு ஆண்டாக சபரிமலையில் தங்கி பதவி நிறைவு பெறும் மேல்சாந்தி நாராயணன்நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் கணபதி கோயிலில் விளக்கேற்றி விட்டு 18-ம் படி வழியாக இறங்கி சென்று ஆழி குண்டத்தில் அக்னி வளர்த்தார். பின்னர் கோயிலுக்கு திரும்பும் போது 18-ம் படிக்கு கீழே நின்ற புதிய மேல்சாந்திகள் சபரிமலை- கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, மாளிகைப்புறம் - கேசவன் நம்பூதிரி ஆகியோருக்கு மாலை அணிவித்து 18-ம் படி வழியாக அழைத்து வந்தார்.
அவர்கள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்ததும் அவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, ஸ்ரீகோயில் முன்புறம் தரையில் அமர்த்தப்பட்டார். அவருக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகள் நடத்தி ஒரு குடம் நீரால் அபிஷேகம் நடத்தினார். பின்னர் அவரது செவியில் ஐயப்பன் மூல மந்திரத்தை சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார். இதுபோல கேசவன் நம்பூதிரிக்கு மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடைபெற்ற சடங்கில் தந்திரிஅபிஷேகம் நடத்தி, தேவி மந்திரம் சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார். நேற்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், தந்திரி அபிஷேகம் நடத்திய பின்னர் மண்டலகால நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.
தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். வரும் 41 நாட்களிலும் காலை 4.15 மணி முதல் பகல் 12.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 7:30-க்கு உஷபூஜை, பகல் ஒரு மணிக்கு உச்சபூஜை, மாலை 6:30-க்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 10க்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். அலைமோதிய கூட்டம்: சபரிமலையில் நடைதிறந்த நேரத்தில் கூட்டம் அலைமோதியது. மாலையில் நடை திறந்த போது புதிய மேல்சாந்திகள் 18-ம் படிக்கு அருகில் வரமுடியாமல் சிரமப்பட்டனர். அதிவிரைவுப்படையினரும், கேரள போலீசாரும் பெரும் சிரமப்பட்டு மேல்சாந்திகளை 18-ம் படிக்கு அருகில் அழைத்து வந்தனர். அதன் பின்னரும் 18-ம் படியேறுவதற்கான நெரிசல் இரவு 7 மணி வரை காணப்பட்டது. 24 மணி நேரமும் பிரசாதம்:கடந்த ஆண்டு வரை நடை திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பிரசாதம் விநியோகிக்கப் பட்டு வந்தது. இந்த ஆண்டில் 24 மணி நேரமும் அப்பம், அரவணை விநியோகிக்கப்படும் என்று தேவசம் நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறினார். ஆன்-லைனில் பிரசாதம் புக்கிங் செய்பவர்களுக்கு தனி கவுண்டர் திறக்கப்படுவதோடு, தற்போது இருப்பதை விட கூடுதல் கவுண்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.