பிளாஸ்டிக் பொருட்களை தவிருங்கள்: பக்தர்களுக்கு தந்திரி வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2014 11:11
சபரிமலை: "சபரிமலை வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்,” என தந்திரி கண்டரரு ராஜீவரரு வேண்டுகோள் விடுத்தார். சன்னிதானத்தில் தினமலர் தகவல் மையத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த பின், அவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: பக்தர்கள் சபரிமலையையும், பம்பா நதியையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஒழுக்கத்தோடு செயல்பட்டு நெரிசல் ஏற்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். மற்றவர்களும் சுவாமி கும்பிட உதவ வேண்டும். இருமுடி கட்டிற்குள் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்கள், பன்னீர் பாட்டில்கள் வைத்துக் கொண்டுவரக்கூடாது. சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் கொண்டுவரப்படும் தரம் இல்லாத பன்னீரை இங்கு பயன்படுத்துவதில்லை. துணிப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சபரிமலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தினமலர் நாளிதழ் சபரிமலையில் பக்தர்களுக்கு செய்துவரும் சேவை பாராட்டுக்கு உரியது. பக்தர்களுக்கு தினமலர் தரும் தகவல்கள் உபயோகமானவை. இவ்வாறு அவர் தெரிவித்தார். தினமலர் மையம்: தினமலர் நாளிதழின் தகவல் மையம், சன்னிதானத்தில் மாளிகைப்புறம் கோயில் எதிரில் உள்ள மீடியா சென்டரில் செயல்படுகிறது. இதன் போன் எண் 0473 5-202 377, மொபைல் போன் 094962 02764.