ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்று திருமூலர் பாடக் காரணம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2014 02:11
ஈசனிடமும் ஆசை கொள்ளாதீர்கள் என தவறாகப் பொருள் கூறி வருகிறார்கள் சிலர். ‘ஈசனோடு’ என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். சுவாமியோடு இருப்பதாகிய கயிலைப் பதவி கிடைத்தும் கூட சிலர் உலக விஷயங்களில் ஆசை கொண்டு விடுகிறார்கள். (உலக ஆசை அவ்வளவு வலியது) இதனால், கயிலைப் பதவியை இழந்து மீண்டும் பூமியில் பிறப்பதாகிய இன்னலுக்கு ஆளாகிறார்கள். சிவனின் அணுக்கத் தொண்டராக இருந்த சுந்தரர், உமாதேவியின் தோழிகள் மீது ஆசை கொண்டதால் தான் பூமியில் பிறக்க நேரிட்டது. ஈசனோடு இருந்தாலும் ஆசை ஏற்பட்டால் பிறவித் துன்பம் ஏற்பட்டு விடும் என்பதை வலியுறுத்தவே திருமூலர் இவ்வாறு கூறியுள்ளார். உலக விஷயங்களை வெறுத்து ஆசையை அறுத்து துறவிகளாக மாறுபவர்களும் மனதளவில் இறைவனோடு ஒன்றியிருப்பதாகத் தான் பொருள். ஆனால், இவர்களில் சிலர் கூட கீழ்த்தரமான ஆசை கொண்டு நெறி தவறி விடுவதால் துன்பத்துக்கு ஆளாவதைத் தான் அடிக்கடி படிக்கிறோமே? இது போன்றவர்களை எச்சரிக்கவும் தான் திருமூலர்,“ஆசை அறுமின்காள்! ஆசையை அறுமின்காள் ! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்காள்!” என்று அற்புதமாகப் பாடியுள்ளார்.