சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக மூன்று வண்ணங்களில் ‘பிரசாதகிட்’ களை திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிமுகம் செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலையில் தங்கும் அறைகள் ஆன் லைனில் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பிரசாதம் மற்றும் கணபதிஹோமம் உள்ளிட்ட சில பூஜைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சபரிமலை அக்காமடேஷன் அலுவலகம் அருகில் புதிய பிரசாத கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஆன்லைனில் பிரசாதம் புக்கிங் செய்து வருபவர்களுக்கான பிரசாதம் கிரீம் கலர் பையில் வழங்கப்படும். திருவிதாங்கூர் தேவசம்போர்டின் இணையதளத்தில் இதற்கான லிங்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கேரள போலீசின் இணையதளத்தில் தரிசனத்துக்காக புக்கிங் செய்து வருபவர்களுக்கு இந்த பிரசாத கிட் வழங்கப்பட மாட்டாது. அது கியூவில் நிற்காமல் வருவதற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த கவுண்டரில் பக்தர்களுக்காக மேலும் இரண்டு வண்ணங்களில் பிரசாதகிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 டின் அரவணை, 4 பாக்கெட் அப்பம், விபூதி, குங்குமம் ஆகியவை வெள்ளை பையில் வழங்கப்படுகிறது. இதன் விலை 270 ரூபாய். ஒரு டின் அரவணை, 2 பாக்கெட் அப்பம், விபூதி, குங்குமம் ஆகியவை நீலநிற பையில் வழங்கப்படுகிறது. இதன் விலை 160 ரூபாய்.