சபரிமலை: சபரிமலையில் பிளாஸ்டிக் குவிவதை தடுக்கும் வகையில் பம்பையில் பிளாஸ்டிக் எக்சேஞ்ச் கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இதை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா திறந்து வைத்தார். சபரிமலையில் கூடும் லட்சக்கணக்கான பக்தர்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற புகார் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. குறிப்பாக மலைபோல் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள் காடுகளையும், காட்டில் வாழும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று எவ்வளவோ பிரசாரம் செய்தும் பெரிய பலன் கிடைக்கவில்லை. எனவே கடந்த ஐப்பசி மாதம் சபரிமலை நடை திறந்த போது பத்தணந்திட்டை- பம்பை ரோட்டில் மூன்று இடங்களில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பக்தர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பெறப்பட்டு அதற்கு பதிலாக துணிப்பை வழங்கப்பட்டது. சீசனில் வாகனங்களை தடுத்து நிறுத்துவது சாத்தியமல்ல. எனவே பம்பையில் இதற்காக தனி கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகளை இங்கு கொடுத்து விட்டு துணி அல்லது பேப்பர் பைகளை பெற்றுக்கொள்ளலாம். பம்பை மணல் பரப்பில் விருச்சுவல் கியூ டோக்கன் கொடுக்கும் பகுதியில் இதற்கான கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று மாலை அமைச்சர் ரமேஷ்சென்னித்தலா திறந்து வைத்தார். தேவசம் ஆணையர் வேணுகோபால், கலெக்டர் ஹரிகிஷோர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பத்தணந்திட்டை மாவட்ட நிர்வாகத்துடன் பெடரல் பேங்க் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக தினமும் இரண்டாயிரம் பைகள் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.