சபரிமலை: தரம் குறைந்த முந்திரி வந்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட அரவணை தயாரிப்பு சபரிமலையில் நேற்று மீண்டும் தொடங்கியது. சபரிமலையில் அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று முந்திரி ( உலர்ந்த திராட்சை). இதை வினியோகம் செய்யும் உரிமையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு டெண்டர் மூலம் வழங்குகிறது. கேரள அரசின் சார்பு நிறுவனமாக ரெய்கோ தற்போது சபரிமலையில் முந்திரி வழங்கி வருகிறது. இந்த முந்திரியின் தரம் குறைவாக உள்ளது என்று பம்பையில் உணவு தரக்கட்டுப்பாடு ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து அரவணை தயாரிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரெய்கோ நிறுவனம் வேறு முந்திரி மூடைகளை பம்பைக்கு அனுப்பி வைத்தது. இதை பரிசோதித்த அதிகாரிகள் தரமானதாக உள்ளது என்று கூறியதை தொடர்ந்து அந்த முந்திரியை பயன்படுத்தி அரவணை உற்பத்தி தொடங்கியது. தரம் குறைந்த முந்திரி மூடைகள் அந்த நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அரவணை உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டதால் பிரசாத வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் , ஏற்கெனவே நடை திறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அரவணை உற்பத்தி செய்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது என்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.