எமதர்மன் என்றாலே மரணத்தை தருபவர் என்று அஞ்சுதல் கூடாது. பிறந்த உயிர்கள் அனைத்துமே என்றாவது ஒருநாள் மரணத்தை தழுவ வேண்டும் என்பது நிச்சயம். எமதர்மனை தக்க முறையில் வழிபாடு செய்தால் மரணபயத்தை தவிர்க்கலாம். அஷ்ட திசைகளில் தெற்கு திசைக்குரியவராகவும், அறக்கடவுளாகவும், தர்மதேவதையாகவும் இருக்கும் எமதர்மனும் அருளும் மூர்த்தியே ஆவார். மகம் நட்சத்திரத்தில் திரிதியை திதி சேர்ந்த நாளில் பலா மரத்தடியில் பிறந்தவர் எமதர்மர். எனவே, மகநட்சத்திரத்திலும், திரிதியை திதியிலும் எமன் சன்னதி உள்ள தலங்களில் வழிபாடு செய்வது சிறப்பு. அன்று பலாப்பழ தானம் செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, அந்திம காலத்தில் மரணஅவஸ்தை இல்லாமல் உயிர் நீங்கும் என்பது நம்பிக்கை. தமிழகத்தில் திருக்கடையூர் அபிராமி கோயில், திருச்சி திருப்பைஞ்ஞீலி ஞீலிவனநாதர் கோயில் உள்ளிட்ட சில தலங்களில் எமதர்மனுக்கு சன்னதிகள் உள்ளன. வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் எமதர்மனுடன், காலசம்ஹாரமூர்த்தி காட்சி தருகிறார். பரமக்குடி அருகிலுள்ள எமனேஸ்வர முடையார் (சிவன்) சன்னதியிலும் வழிபாட்டைச் செய்யலாம்.