திருக்கார்த்திகை விரதம் இருந்தால் மாயை அகன்று மனம் அக்னி போல பிரகாசிக்கும். இவ்விரதத்தை முந்தைய நாளான பரணியிலிருந்தே துவக்க வேண்டும். பரணி அன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். பக்கத்தில் உள்ள சிவன் அல்லது முருகன் கோயிலுக்குச் சென்று வேண்டி விரதத்தை தொடங்கலாம். கோயிலுக்கு போக இயலாதவர்கள் வீட்டில் தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு தலையைச் சுற்றி தண்ணீர் தெளித்து பின் கிழக்கு நோக்கி நின்று இறைவனை பிரார்த்திக்க வேண்டும். அன்று இரவு சர்க்கரை போடாத பால், இனிப்பு குறைவான பழங்கள் இவற்றை அரை வயிறு எடுத்துக் கொள்ளலாம். மறுநாள் அதிகாலை எழுந்து நீராடி நீறு தரித்து இறைவனை வணங்க வேண்டும். தெரிந்த சிவ துதிகளையும் முருகன் துதிகளையும் சொல்லலாம். தெரியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 12 முறை ஜபிக்க வேண்டும். அன்று முழுவதும் தண்ணீர் கூட அருந்தக் கூடாது. தகாத வார்த்தைகள் பேசுதல், கோபப்படுதல் இவற்றை அறவே விலக்க வேண்டும். மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் கடவுளை மனமுருகி வேண்டிக் கொண்டு சிறிது பழச்சாறு அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் அன்றும் அரிசிச் சோறு உண்ணக் கூடாது. பால், ஜவ்வரிசிக் கஞ்சி, பயத்தம்பருப்புக் கஞ்சி இவற்றை உண்ணலாம்.
பலன்: இவ்விரதம் இருப்பதால் பகை அழியும், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும், நல்ல புத்திரர் தோன்றுவர். கார்த்திகை விரதத்தை தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடித்தால் எண்ணியது யாவும் நிறைவேறும் என்பது ஐதிகம்.