சபரிமலை: ”ஐயப்பனுக்கு 25 ஆண்டுகள் பூஜை செய்தது பரவசத்தை ஏற்படுத்துகிறது,” என சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறினார். சபரிமலை தாந்திரிக உரிமை தாழமண் குடும்பத்திடம் உள்ளது. இவர்களின் மடம் செங்கன்னூர் அருகே உள்ளது. சபரிமலையில் செயல்படுத்தப்படும் முடிவுகள் தாழமண் தந்திரிகளிடம் ஆலோசனை செய்த பிறகே இறுதி செய்யப்படும். தற்போது இக்குடும்பத்தில் கண்டரரு மகேஸ்வரரு, கண்டரரு ராஜீவரரு என இரண்டு தந்திரிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் சபரிமலை பூஜைகளை கவனிக்கின்றனர். இவர்களில் மூத்தவர் கண்டரரு மகேஸ்வரரு. இவரது மகன் கண்டரரு மோகனரரு பூஜைகள் செய்து வந்த நிலையில் சர்ச்சைகளில் சிக்கினார். இதனால் இவரை சபரிமலையில் இருந்து விலக்கி தேவசம்போர்டு உத்தரவிட்டது. தற்போது மகேஸ்வரருவின் பேரன் கண்டரரு மகேஸ்வரரு பூஜைகளை கவனிக்கிறார். மற்றொரு தந்திரி கண்டரரு ராஜீவரரு, கண்டரரு கிருஷ்ணரருவின் மகன். கடந்த 1980ல் தந்தைக்கு உதவியாக சபரிமலைக்கு வரத் துவங்கினார். 1990ல் கிருஷ்ணரரு இறந்த பின், சபரிமலை தந்திரியாக பொறுப்பேற்றார். ”தந்திரி பொறுப்பில் கடந்த 25 ஆண்டுகளாக ஐயப்பனுக்கு பூஜைகள் செய்தது பெரும் பாக்கியம்; அந்த ஆத்மதிருப்தியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது,” என்றார் ராஜீவரரு.