பதிவு செய்த நாள்
03
பிப்
2015
02:02
திண்டுக்கல்: பழநி தைப்பூசத்தை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகரிப்பால், மலைக்கோயிலில் பக்தர்கள் 3 நிமிடத்திற்கு மேல் அமர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழநி தைப்பூச விழா இன்று நடக்கிறது. இதையொட்டி மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழநியில் குவிந்துள்ளனர்.
பக்தர்கள் சண்முகநதி, சரவணப்பொய்கை, இடும்பன் குளத்தில் குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெரிசலை கட்டுப்படுத்த பழநி அடிவாரம் பகுதி, கிரி வீதிகள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நீண்ட நேரம் அமரத்தடை: பழநியில் இன்று நடக்கும் தைப்பூச பாதுகாப்பிற்கு சரவணன் எஸ்.பி., தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் மலைக்கோயில் சென்று தரிசனம் செய்துவர, யானைப்பாதையில் ஏறவும், படிப்பாதையில் இறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் மலைக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில் அமர்ந்து பிரசாதம்
சாப்பிடுவது வழக்கம். சிலர் அங்கேயே தூங்கியும் விடுவார்கள். தைப்பூச நாளில் பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் மலைக்கோயிலில் கூடும்போது நெரிசல் ஏற்படும். இதனால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, தரிசனம் முடித்ததும் 3 நிமிடம் மட்டுமே அங்கு அமரலாம். அதன்பின் பக்தர்கள் உடனடியாக கீழே இறங்க வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் யானைப்பாதையில் செல்லும் பக்தர்களையும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழு, குழுவாக பிரித்து அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதே போல், திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர்.